SMS மூலம் குர்ஆன் வசனங்களை அனுப்பலாமா?

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்.எம்.எஸ் இல் அனுப்பக்கூடாது என்று சௌதி அரசு பத்வா கொடுத்துள்ளதாக செய்தி பரவி வருகிறது. ஏனென்றால் படித்த பிறகு அதை அழிக்க வேண்டிய நிலை உருவாகிறது. குர்ஆன் ஆயத்துகளை ஒரு முஸ்லிம் தன் கரத்தினாலே அழிப்பான் என்று கியாமத்து நாளின் அடையாளமாகக் கூறப்பட்டுள்ளது. இது உன்மையா? உங்கள் ஜாமத்தும் மொபைல் மூலமாக குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை எஸ்.எம்.எஸ் இல் அனுப்பி வருகிறது.

முஸ்லிம் தன் கரத்தாலே குர்ஆனை அழிக்கும் போது கியாமத் நாள் வரும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியையும் நம்மால் ஹதீஸ் நூற்களில் காண முடியவில்லை.

குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாதவர்களே இவ்வாறு தவறான தீர்ப்புகளை வழங்குகின்றனர். குர்ஆன் என்றால் எது? அதை எவ்வாறு மதிப்பது? ஆகிய விபரங்களை அறிந்து கொண்டால் தான் இது பற்றி சரியான முடிவை எடுக்க முடியும்.

அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது. குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு எழுத்து வடிவில் புத்தகமாக வரவில்லை. மாறாக ஓசை வடிவில் அருளப்பட்டது.

குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நபிகள் நாயகம் (ஸல்) எழுத்தர்களை நியமித்து எழுதச் செய்தார்கள்.

இன்றைக்கு நவீன காலத்தில் குறுந்தகடுகளிலும், கணிணியிலும், செல்ஃபோன்களிலும் குர்ஆன் பதியப்படுகின்றது. குர்ஆன் பதியப்பட்டு விட்டதால் இந்த நவீன சாதனங்களுக்கு மகத்துவம் வந்துவிடுகிறது என்று யாரும் கருத மாட்டோம்.

ஒருவர் குர்ஆனை செல்ஃபோனில் பதியவைத்து அதை அழிக்காமல் வைத்திருந்தால் அவர் குர்ஆனைப் பதிய வைத்துக் கொண்டார் என்று கூறலாமே தவிர இதனால் அவர் குர்ஆனை மதித்தவராகி விட மாட்டார். இதே போன்று தன்னுடைய தேவைக்காக குர்ஆன் பதியப்பட்ட ஃபைலை ஒருவர் சாதனத்திலிருந்து அகற்றினால் அவர் குர்ஆனை இழிவுபடுத்தியவராக மாட்டார்.

நவீன சாதனங்களில் குர்ஆனைப் பதிய வைப்பதும், பதியப்பட்ட ஃபைலை அழிப்பதும் நம்முடைய சொந்த வசதிக்காகவே செய்கிறோம். குர்ஆனுக்கு மரியாதை செலுத்துதல் என்றோ, அவமதித்தல் என்றோ இதை யாரும் செய்வதில்லை.

ஒரு பொருள் நமக்குத் தேவைப்பட்டால் வைத்துக் கொள்வோம். தேவைப்படாவிட்டால் அழித்து விடுவோம். குர்ஆனில் தேவையானது தேவையற்றது என்று பிரிக்கக் கூடாது.

ஆனால் குர்ஆன் பதியப்பட்ட பொருள் நமக்குத் தேவைப்படலாம். தேவைப்படாமலும் போகலாம். உஸ்மான் (ரலி) அவர்கள் தேவையற்ற குர்ஆன் பிரதிகளை எரித்ததும் இந்த அடிப்படையில் தான்.

அச்சடிக்கப்பட்ட எத்தனையோ குர்ஆன் பிரதிகள் கிழிந்து பயன்படுத்த முடியாத நிலையை அடைகின்றன. இந்தப் பிரதிகளை அழிக்கக்கூடாது. பாதுகாக்க வேண்டும் என்று சவூதி அறிஞர்கள் கூறுவதில்லை. அப்படிக் கூறினாலும் அது நடைமுறைக்கு சாதியமில்லாத கூற்றாகவே இருக்கும்.

எனவே மெஸேஜ்கள் மூலம் குர்ஆன் வசனங்களை டைப் செய்து மக்களுக்குப் பரப்புவது தவறில்லை. இவ்வாறு அனுப்பப்பட்ட மெஸேஜ்களைப் படித்துவிட்டு அதை நீக்குவதும் தவறில்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed