ஷவ்வால் ஆறு நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டுமா❓

 
 
ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் பிடிக்க வேண்டும் என்று உள்ளது.ஷவ்வால் ஆறு நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டுமா❓

இது பெருநாளை அடுத்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டுமா❓ஷவ்வால் ஆறு நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டுமா❓

அல்லது ஷவ்வால் மாதம் முழுவதும் ஏதேனும் ஆறு நாட்களில் நோற்றுக் கொள்ளலாமா❓

யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி),
நூல் : முஸ்லிம் 2356

இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

இது தவறான வாதமாகும். ஏனெனில் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில் தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.

தொடர்வது என்பதற்கு அத்பஅஹு என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சி என்பதற்கு முததாபிஐன் என்ற சொல் பயன்படுத்தப்பட வேண்டும்.

உதாரணமாக திருக்குர்ஆனில், மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டு விடுபவர் அதற்குப் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் கூறப்படுகின்றது.

(அடிமைகளை) பெற்றுக் கொள்ளாதவர், அவ்விருவரும் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். இதற்கும் சக்தி பெறாதவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 58:4

இந்த வசனத்தில் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும் என்பதற்கு முததாபிஐன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற வாசகம் பயன்படுத்தப்பட்டிருந்தால் ஆறு நோன்பு தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறலாம். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் அவ்வாறு கூறப்படவில்லை.

ஒரு வாதத்திற்கு ரமளானைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டால், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது. ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர். இதில் ரமளானைத் தொடர்ந்து என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால் அது ரமளானின் தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தான் ஆறு நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.

எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷவ்வால் மாதம் முழுவதும் உள்ள நாட்களில் ஏதேனும் ஆறுநாட்கள் நோன்பு வைக்கலாம் என்பதே சரியான கருத்தாகும்.

முப்பது நோன்பும் ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறு நோன்புகளாகின்றது. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப்படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் கூறியுள்ளனர்.

ஆறு நோன்பின் தத்துவம் இது தான் என்றால் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம். ஆனால் ஷவ்வாலில் என்று ஹதீஸ்களில் இடம்பெறுவதால் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பையும் வைத்து விட வேண்டும்.