ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி❓

ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி

ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையை கேட்கும் நாட்கள் என்றும், நடுப்பத்து நாட்கள் மக்ஃபிரத் எனும் பாவமன்னிப்புக்கு உரியவை என்றும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து மீட்சியளிக்கக் கூடிய நாட்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகவும்,

அந்த ஒவ்வொரு 10 நாட்களுக்கும் பிரத்யேகமான ஒவ்வொரு துஆ இருப்பதாகவும் மக்களிடத்திலே ஒரு செய்தி பரவலாக‌ வேரூன்றியுள்ள‌து. அதனால் மூன்று 10 நாட்களுக்கும் மூன்று விதமான துஆக்களை ஓதவேண்டும் என்று பலர் நம்பியும், நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள்.

தாரீஹ் திமிஷ்க் லிஇப்னி அஸாகிர் என்ற நூலிலும் இன்னும் சில நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள அத்தகைய செய்தி அனைத்துமே பலஹீனமானவை!

அதன் அறிவிப்பாளர்களில் வரக்கூடிய ஸல்லாம் இப்னு ஸிவார்‘, ‘மஸ்லமாகிய‌ இருவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.

சுன்னாஹ்வில் இல்லாத இந்த துஆக்களை ஓதிவரும் மக்கள், கடைசிப் பத்து நாட்களில் அதிகமதிகமாக ஓதி பிரார்த்திக்கும்படி நமக்கு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சொல்லித் தந்த துஆவினை நடைமுறைப்படுத்துவதில்லை. எங்கே பித்அத் தோன்றுகிறதோ அங்கே சுன்னத் மறைக்கடிக்கப்பட்டு விடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் சொல்லித்தராத துஆக்களை பிரத்யேகமாக ஒவ்வொரு பத்து நாட்களிலும் ஓதவேண்டும் என்றெண்ணி ரமலானின் பெயரால் بدعة பித்அத் செய்யாமல், ரமலான் முழுமைக்கும் நமக்கு வேண்டிய அனைத்தையும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்,

ஏகத்துவம்