திருக்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன?

திருக்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன?

திருக்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் வேறுபாடு என்னீஈ?

திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகளாக இருப்பது போல் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னவையும், செய்தவையும் அல்லாஹ்வால் அருளப்பட்டவை தான். ஏனெனில் மார்க்க விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்தக் கருத்து எதையும் கூற மாட்டார்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்படுவதை மட்டுமே அவர்கள் மார்க்கம் என்று காட்டித்தருவார்கள். எனவே திருக்குர்ஆனும் இறைச் செய்தி தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் இறைச்செய்தி தான். இரண்டையும் முழுமையாகப் பின்பற்றுவது முஸ்லிம்களின் கடமையாகும்.

உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.

திருக்குர்ஆன் 53:2,3

அப்படியானால் ஹதீஸ்களில் மட்டும் சரியானவை, தவறானவை என்று எப்படிச் சொல்லப்படுகிறது?

இதற்கான விளக்கம் இதுதான்:

ஒரு ஹதீஸ் தவறானது என்று சொல்லப்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவறாகச் சொல்லி விட்டார்கள் என்பது அதன் பொருளல்ல.

அப்படி ஒருவர் சொன்னால் அவர் முஸ்லிமாக இருக்க முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா?

இல்லையா என்ற சந்தேகம் காரணமாகவே சில ஹதீஸ்கள் தவறானவை என்று சொல்லப்படுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நாம் வாழ்வதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் நம்மிடம் ஒரு திருக்குர்ஆன் வசனத்தை ஒதிக்காட்டினால் அதை அப்படியே ஏற்போம். அது போல் திருக்குர்ஆனில் சொல்லப்படாத கூடுதல் செய்தியைக் கூறினால் அதையும் அப்படியே ஏற்றாக வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நாம் காதால் கேட்டதால் அவர்கள் சொன்னார்களா என்ற சந்தேகத்துக்கு இடமில்லை. அப்போது எல்லா செய்திகளுமே சரியானவை தான்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் வாழும் மக்களுக்கு இந்த நிலை இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் வந்த மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்பட்ட சரியான செய்திகளும் கிடைத்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்படாத பொய்களும் அவர்கள் பெயரால் மக்களை வந்தடைந்தன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.

திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே எழுத்தர்கள் மூலம் எழுதச் செய்து பாதுகாக்கப்பட்டது.

ஆனால் ஹதீஸ்கள் அனைத்தையும் பாதுகாக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. மிகச் சில நபித்தோழர்கள் மிகச் சில ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொண்டார்கள். அனைத்து ஹதீஸ்களும் அவர்கள் காலத்தில் யாராலும் எழுதப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனைத் தாமும் மனனம் செய்தார்கள்.

பல நபித்தோழர்களும் மனப்பாடம் செய்திருந்தனர்.

இது போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.

அனைத்து ஹதீஸ்களையும் மனப்பாடம் செய்த ஒரே ஒரு நபித்தோழர் கூட இருந்ததில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போது ஒவ்வொரு ஆண்டும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து திருக்குர்ஆனைச் சரிபார்ப்பார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கும் வேளையில் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 6

இது போன்ற பாதுகாப்பு ஹதீஸ்களுக்கு இருக்கவில்லை.

நாம் இப்போது எதைத் திருக்குர்ஆன் என்று கூறுகிறோமோ அது தான் திருக்குர்ஆன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரும் ஒருமித்து அடுத்த தலைமுறைக்குச் சொன்னார்கள்.

இப்படி ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லாமல் இது தான் திருக்குர்ஆன் என்று அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்தார்கள்.

ஆனால் ஹதீஸ்களைப் பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபித்தோழரோ, இரண்டு மூன்று நபித்தோழர்களோ தான் அடுத்த தலைமுறைக்கு – அதாவது அடுத்த தலைமுறையில் சிலருக்குச் – சொன்னார்கள்.

இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சிலர் தான் அடுத்த தலைமுறைக்கு ஹதீஸ்களைக் கொண்டு சேர்த்தார்கள்.

எழுத்து வடிவில் அனைத்து ஹதீஸ்களும் பாதுகாக்கப்படாததால் ஹதீஸ்கள் நூல் வடிவம் பெறும் காலம் வரை கட்டுக்கதைகளும் ஹதீஸ்கள் என்ற பெயரில் நுழைந்தன.

ஆனால் திருக்குர்ஆனில் எந்த வார்த்தையும் எந்தக் காலத்திலும் இட்டுக்கட்டிக் கூறப்படவே இல்லை.

திருக்குர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றுக் கொண்டான்.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

திருக்குர்ஆன் 15:9

ஒரு குர்ஆன் வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டால் அவர்கள் அதை மனதில் பதிய வைத்துக் கொண்டு திருக்குர்ஆனை எழுதுவதற்காக நியமிக்கப்பட்டு இருந்த எழுத்தர்களை அழைத்து எழுதிக் கொள்ளச் செய்வார்கள். அவர்களில் பலர் மனப்பாடம் செய்தும் கொள்வார்கள்.

அருளப்பட்ட வசனங்களை கூட்டுத் தொழுகைகளில் சப்தமாக நபியவர்கள் ஓதி வந்ததால் எழுதத் தெரியாத நபித்தோழர்களும் குர்ஆன் வசனங்களை மனனம் செய்தார்கள்.

எழுதிவர்களின் கவனக்குறைவால் தவறுகள் நேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதால் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அனைவரின் எழுத்துப் பிரதிகளும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு பின்னர் மனப்பாடம் செய்தவர்களின் மனனத்துடன் சரிபார்க்கப்பட்டு பிழையற்ற மூலப்பிரதி உருவாக்கப்பட்டது.

திருக்குர்ஆனில் இல்லாத ஒன்றை திருக்குர்ஆன் என்று இட்டுக்கட்டி சொல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் ஹதீஸ்களைப் பாதுகாக்க இத்தகைய ஏற்பாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யவில்லை. அனைத்து ஹதீஸ்களையும் யாரும் மனனம் செய்யவுமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் அல்லாத ஒரு செய்தியை, ஒரு சட்டத்தை ஒரு சபையில் சொல்கிறார்கள் என்றால் அந்த சபையில் இருந்தவர்கள் மட்டுமே அதை அறிவார்கள். அவர்கள் தமது வாழ்க்கையில் அதைக் கடைப்பிடிப்பார்கள். அது மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டிய நிலை வந்தால் சொல்வார்கள். அதை அனைத்து நபித்தோழர்களும் அறிய முடியாது. அதிகமான நபித்தோழர்கள் கூட அறிய முடியாது.

ஒரு நபித்தோழர் வந்து நபிகள் நாயகத்திடம் ஒரு கேள்வியைக் கேட்டால் கேள்வி கேட்கும் போது ஓரிருவர் அதை செவிமடுக்கத் தான் வாய்ப்பு உள்ளது. பல்லாயிரம் தோழர்களைக் கொண்ட அச்சமுதாயத்தில் அந்தச் செய்தியை அ|றிந்த ஓரிருவர் தான் இருப்பார்கள்.

அடுத்த தலைமுறையிலும் இது போன்ற நிலைதான் இருந்தது.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு நபித்தோழர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தார்கள்.

உதாரணமாக பத்து நபித்தோழர்கள் கெய்ரோ நகருக்கு இடம் பெயர்ந்தால் அந்தப் பத்து நபித்தோழர்கள் தமக்குத் தெரிந்த ஹதீஸ்களை மட்டும் தான் அந்த மக்களுக்குச் சொல்வார்கள். இது மொத்த ஹதீஸ்களில் ஒரு சதவிகிதம், இரு சதவிகிதம் என்ற அளவில் தான் இருக்கும். மீதி ஹதீஸ்கள் இவ்வூராருக்குக் கிடைக்க வழியில்லை.

ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்ற நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் செவியுற்ற செய்திகளை வாய்மொழியாக மட்டுமே அறிவித்து வந்தார்கள்.

அவர்களிடம் ஹதீஸ்களச் செவியுற்றவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு வாய்மொழியாகவே சொன்னார்கள். இப்படி வாய்மொழியாக மட்டுமே ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டு வந்தன.

குர்ஆன் வசனம் என யாரேனும் ஒரு வசனத்தைக் கூறினால் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட மூலப்பிரதியைப் பார்த்தும், மனனம் செய்தவர்களைக் கேட்டும் அது குர்ஆனில் உள்ளதா? இட்டுக்கட்டப்பட்டதா என்று கண்டறிந்து விட முடியும். இதனால் குர்ஆனில் இல்லாத ஒன்றை, குர்ஆன் எனக் கூற யாருக்கும் துணிவு வரவில்லை.

ஆனால் ஹதீஸ்கள் ஒருவரால் கூட முழுமையாக மனனம் செய்யப்படவில்லை என்பதாலும், எழுத்து வடிவில் அனைத்து ஹதீஸ்களும் தொகுக்கப்படாததாலும் ஹதீஸ் என்ற பெயரால் இட்டுக்கட்டும் வாசல் அடைக்கப்படாமல் இருந்தது.’

ஒட்டு மொத்த ஹதீஸையே இட்டுக் கட்டினாலும், கூடுதலாக சில வாக்கியங்களைச் சேர்த்தாலும், நீக்கினாலும் அதைக் கண்டறிய முடியாத நிலை இருந்தது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தீய சக்திகளும், அறிவீனர்களும் பொய்களை ஹதீஸ்கள் என்று கூறலானார்கள்.

இதனால் ஹதீஸ்களுடன் ஹதீஸ் அல்லாதவைகளும் கலந்து விட்டன.

இப்படி ஹதீஸ்களை இட்டுக்கட்டியவர்கள் பல தரப்பட்டவர்களாக இருந்தனர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நோக்கங்கள் இருந்தன.

 

அது குறித்து நாம் அறிந்து கொண்டால் தான் சரியானவை, தவறானவை என்று ஹதீஸ்களப் பிரிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதைத் தெளிவாக அறியலாம்.