பைலா தவ்ஹீத் ஜமாஅத்தின் மூன்றாம் ஆதாரமா?

ஆர். அப்துல் கரீம்

சமீப காலமாகத் தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி ஒரு விமர்சனக் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் இவ்வளவு காலம் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு தான் தங்களுக்கு மூல ஆதாரம் என்றார்கள். இப்போது எதற்கெடுத்தாலும் பைலா, பைலா என்கிறார்கள்.  குர்ஆன், ஹதீஸ் எனும் இருபெரும் ஆதாரத்தைத் தாண்டி, பைலா எனும் இயக்கவிதி இவர்களுக்கு மூன்றாம் ஆதாரமாகி விட்டது.

இது தான் அந்தக்குரல்.

இக்குரலுக்குச் சொந்தக்காரர்கள் யார்?

பைலா எனும் இயக்கவிதி குறித்து அடிப்படை அறிவு இல்லாத கப்ர் வணங்கிகளோ அல்லது இயக்கவிதியின் தேவையை வலியுறுத்தும் ஒன்றுபட்ட நிர்வாக அமைப்பைக் கட்டமைத்துக் கொள்ளாத ஸலபிக் கூட்டத்தினரோ அல்ல.

இவ்வளவு காலம் இதே ஜமாஅத்தில் பயணித்து, இன்று எந்த பைலாவைத் தூற்றுகிறார்களோ, அதே பைலாவை தூக்கிப்பிடித்துப் பேசிய ஒரு சிலர் தான் இன்றைக்கு இப்படி நிறம் மாறிப் பேசுகிறார்கள்.

இவர்களது கூற்றில் நியாயமுள்ளதா?

தவ்ஹீத் ஜமாஅத் தனது மூல ஆதாரங்களின் எண்ணிக்கையில் ஒன்றை அதிகப்படுத்திக் கொண்டதா? என்றால் நிச்சயமாக இல்லை.

இறைவனின் புறத்திலிருந்து அருளப்பட்ட இறைச்செய்தி மட்டுமே இஸ்லாத்தின் மூலாதாரம் எனும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டில் எள்முனையளவும் மாற்றமில்லை.

அப்படியானால் பைலா குறித்த இவர்களின் விமர்சனம்?

மனிதர்கள் தங்களுக்குள் உடன்பட்டு, நிறைவேற்றுவதாக ஒப்புக் கொள்ளும் ஒப்பந்த விதிகளே பைலா எனப்படுகிறது.

ஒரு நிறுவனம், தனது ஊழியர்களிடம் விதிக்கும் விதிமுறைகள், ஒரு நாடு தனது குடிமக்களுக்கு விதிக்கும் சட்டவிதிகள், ஒரு பள்ளி அல்லது கல்லூரி தனது மாணவர்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் அனைத்துமே பைலாவின் கீழ்தான் வருகிறது.

ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்பவர் அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு பணியில் சேர்கிறார் என்றால் அவர் தனது ஒப்பந்தங்களை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளார்.

இதுபோன்றே பள்ளி, கல்லூரியில் சேரும் மாணவர் அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை, சட்டவிதிகளை ஏற்றே பள்ளியில் சேர்கிறார் எனும் போது தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என மார்க்கம் வலியுறுத்துகிறது.

வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும். 

அல்குர்ஆன் 17:34

நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்!  

அல்குர்ஆன் 5:1

இவ்வசனங்களின் படி, தான் ஏற்றுக் கொண்ட ஒப்பந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது மார்க்கத்திற்கு உட்பட்டது தானே தவிர மார்க்கத்திற்கு எதிரானது அல்ல.

உதாரணமாக பள்ளி, கல்லூரி அல்லது நிறுவனத்தில் காலை 9 மணிக்கு உள்ளே வந்தாக வேண்டும், இன்ன நிற ஆடை தான் அணிந்து வர வேண்டும், இத்தனை மணிக்கு வெளியே செல்ல வேண்டும் என சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றார்கள். அங்கே இது தான் பைலா.

அதற்கு உடன்பட்ட யாரும் ‘பைலா என்ன குர்ஆனா? ஹதீஸா பின்பற்றுவதற்கு? அதனால் நான் இதற்குக் கட்டுப்பட மாட்டேன்’ என்றால் அவர்களை என்னவென்போம்?

மார்க்கத்தைப் போதிக்கும் மத்ரசாக்களில் கூட இன்ன நேரத்தில் தான் சாப்பிட வேண்டும், இன்ன நேரத்திற்கு வகுப்பிற்கு ஆஜராக வேண்டும் என்று இத்தகைய சட்டவிதிகள் உண்டு.

அந்த ஒப்பந்தத்தில் உடன்பட்ட ஒருவர்…

இஸ்லாத்தில் பைலாவை மூன்றாம் ஆதாரமாக்கி விட்டீர்கள்,

பைலா என்ன குர்ஆனா? ஹதீஸா?

குர்ஆன் ஹதீஸை போதிப்பதாகக் கூறிக் கொண்டு பைலாவை தூக்கிப்பிடிக்கின்றீர்கள்?

என பிதற்றிக் கொண்டிருந்தால் அவருக்கு அறிவுலகம் என்ன பெயர் சூட்டும் என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பவர்களின் போக்கு இதற்கு ஒப்பவே அமைந்துள்ளது.

ஆலோசனை

ஒரு இயக்கத்தை நிர்வகிக்க சட்டவிதிகள் தேவைப்படுகிறது.

எத்தகைய விதிகளை உருவாக்கி கொண்டால் சிறப்பாகச் செயல்பட முடியும் என தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசித்து எடுக்கப்பட்ட மஷூராவின் முடிவே பைலாவாகும்.

காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 3:159

உங்களுக்கு எந்தப் பொருள் கொடுக்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளே. நம்பிக்கை கொண்டு தம் இறைவனையே சார்ந்திருப்போருக்கும், பெரும் பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்வோருக்கும், கோபம் கொள்ளும் போது மன்னிப்போருக்கும், தமது இறைவனுக்குப் பதிலளித்து தொழுகையை நிலைநாட்டி தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவோருக்கும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் அல்லாஹ்விடம் இருப்பதே சிறந்ததும் நிலையானதுமாகும்

அல்குர்ஆன் 42:38

இறை விசுவாசிகள் தங்களுக்கிடையே காரியங்களில் ஆலோசித்துக் கொள்வார்கள் என்ற இறைவசனத்தின்படி தவ்ஹீத் ஜமாஅத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்ல என்னென்ன சட்டவிதிகள் தேவை என்பதை ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசித்து எடுத்த மஷூராவின் தொகுப்பே பைலாவாகும்.

அனைவரும் சேர்ந்து ஆலோசித்து அல்லது அதிகமானோர் சொன்ன முடிவை அனைவரும் ஆமோதித்து இயற்றப்பட்ட மஷூராவின் தொகுப்பைப் பின்பற்றுவதில் என்ன தவறு?

நம் நன்மைக்காக நாம் ஆலோசித்து எடுத்த முடிவின் படி நடந்தால் அது எப்படி குர்ஆன்,  ஹதீஸிற்கு எதிரானதாகும்?

இந்த அடிப்படை புரியாமல் தான் மாற்றுக் கருத்துடையோர் பைலா குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

மாற்றம் தேவையா?

அதேவேளை எந்தக் காலத்திற்கும் எவ்வித மாறுதலுக்கும் உட்படுத்தத் தேவையில்லாத புனிதக் கருத்துக்கள் தாம் தவ்ஹீத் ஜமாஅத்தின் பைலா என்று இங்கே யாரும் கூற முன்வரவில்லை.

எந்த மனிதரின் கருத்திற்கும் காலத்திற்கேற்ப மாறுதல் தேவை எனும் அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் பைலாவும் மாறுதலுக்கு உட்பட்டதே.

ஜமாஅத்தின் நன்மைக்கும் தூய்மைக்கும் பைலாவில் இன்னின்ன மாற்றங்கள் தேவை எனக் கருதி ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்தால் அத்தகைய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

ஆனால் தற்போது நாம் வகுத்திருக்கும் அமைப்பு நிர்ணயச் சட்டத்தில் பெரிதான எந்தக் குளறுபடியும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்த பைலா தான் பொருளாதார மோசடிப் பேர்வழிகளை வெளியேற்றியது.

பெரும் பெரும் ஜாம்பவான்களாக இருந்தாலும், ஜமாஅத்தின் உச்சக்கட்ட அதிகாரத்தைப் பெற்றவராக இருந்த போதிலும், அவர்கள் ஒழுக்க மாண்பில் சரியில்லை என்றதும் இதே பைலா தான் அவர்களையும் பொறுப்பிலிருந்து வெளியேற்றியது. இலட்சக்கணக்கான ஜமாஅத் உறுப்பினர்களை வழிநடத்தும் தகுதியை அவர்களிடமிருந்து பறித்தது.

நமது பைலாவின் நோக்கம் என்ன?

அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கப்பட வேண்டியவன். அவனன்றி வேறு யாரும் வணங்குதலுக்குத் தகுதியானவர்கள் அல்ல.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டியவர்கள்.

அவர்களையன்றி வேறு யாரும் பின்பற்றப்பட வேண்டியவர்கள் அல்ல.

இது தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலையாய ஏகத்துவ – தூதுத்துவக் கொள்கையாகும்.

இக்கொள்கைக்காகவே இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் இந்த ஜமாஅத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

தாய், தந்தை, சொந்த பந்தங்கள், ஊர் மக்கள் என பலரையும் இந்தக் கொள்கைக்காகப் பகைத்துக் கொண்டார்கள்.

எனவே, ஜமாஅத் இதே கொள்கைப் பாதையில் பயணிக்க வேண்டும். கொள்கை ரீதியாக இந்த ஜமாஅத்தை யாரும் தடம் மாற்றிப் பயணிக்க வைத்து விடக்கூடாது என்பதற்காகவே ஷிர்க் எனும் இணைவைப்பில் உள்ளவர்கள் யாரும் இந்த ஜமாஅத்திற்குள்ளே வரக்கூடாது எனும் விதி உருவாக்கப்பட்டது

தவ்ஹீதின் பெயரால் இந்த அமைப்பிற்குள்ளே வேறு பல நோக்கமுடையவர்கள் வந்தாலும் அவர்கள் இந்த அமைப்பை அதன் இலட்சியப் பாதையான ஏகத்துவத்திலிருந்து மடைமாற்றி, இணைவைப்பை நோக்கி அழைத்துக் கொண்டு சென்றுவிடக்கூடாது.

மனிதக் கருத்துக்களை மார்க்கமாக்கி விடக் கூடாது எனும் தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை கொள்கைக்கு எதிராகவுள்ள மத்ஹப் பேர்வழிகள் யாரும் இந்த அமைப்பிற்குள்ளே வர முடியாது. ஏனெனில், உள்ளே வந்து மத்ஹப் எனும் வழிகேட்டை நோக்கி ஜமாஅத்தை அழைத்து சென்று விடக்கூடாது என்பதற்காக இந்த விதியை உருவாக்கியுள்ளோம்.

காலங்கள் பல கடந்தாலும் தலைவர்கள் – நிர்வாகிகள் மாறினாலும் இலட்சக்கணக்கான தொண்டர்களின் அர்ப்பணிப்பில் உருவாக்கப் பட்ட தவ்ஹீத் ஜமாஅத், அது எந்த உயரிய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதன் பாதையிலிருந்து திசைமாறிவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய பைலா விதிகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

இதைப் புரிந்து கொள்ள முற்படாதவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தையும் அது வகுத்து வைத்துள்ள பைலாவையும் விமர்சிப்பதைப் பற்றி நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed