வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நபிமொழியில் குறிப்பிடப்படும் நேரம் எது?

ஜும்ஆவின் அத்தஹியாத்து இருப்பு…

ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்கு இடையில் இமாம் சிறிது நேரம் அமருவார். இந்த சிறிய இடைவெளியில் பிரார்த்தனை செய்தால் அந்தப் பிரார்த்தனை ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில் சிலர் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றார்கள். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள்

என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம் ; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அது, இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.

முஸ்லிம் (1546)

இமாம் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று இந்த ஹதீஸில் உள்ளது. இமாம் அமர்வது என்பது மிம்பரில் ஏறியவுடன் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா? அல்லது இரண்டு குத்பாக்களுக்கு இடையே அமர்வதைக் குறிக்கிறதா?

அல்லது

அத்தஹிய்யாத்தில் இமாம் அமர்வதைக் குறிக்கிறதா என்பதை நாம் ஆய்வு செய்து சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும்.

இமாம் மிம்பரில் ஏறி அமர்ந்தவுடன் பாங்கு சொல்லப்படும்.

அப்போது துஆ செய்ய கூடாது; பாங்குக்குத் தான் பதில் கூற வேண்டும். அதன்பின் உரை ஆரம்பமாகும். அப்போது உரையைக் கேட்க வேண்டுமே தவிர துஆ செய்து கொண்டிருக்கக் கூடாது. அதன் பின் தொழுகை ஆரம்பமாகி விடும். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை துஆ செய்யும் நேரம் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே இமாம் அமர்தல் என்பது இதைக் குறிக்காது.

இரண்டு குத்பாக்களுக்கு இடையே இமாம் அமர்வது சிறிதளவு நேரம் தான். அமர்ந்து உடனே எழுந்து விடுவதாலும் அதன் பின்னர் இரண்டாம் உரையும் அதைத் தொடர்ந்து தொழுகையும் ஆரம்பமாகி விடும். எனவே இமாம் அமர்தல் என்பது இதைக் குறிக்க முடியாது. ஏனெனில் இமாம் இடையில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை துஆ செய்யாமல் வேறு காரியங்களில் ஈடுபடும் அவசியம் உள்ளது.

இமாம் உரையாற்றும் போது அவருடைய உரையை கவனமாக கேட்பது மக்களின் பொறுப்பாகும். உரையில் கவனம் செலுத்தாமல் வேறு விசயத்தில் கவனம் செலுத்தினால் அந்த விசயம் நல்ல விசயமாக இருந்தால் கூட ஜும்ஆவின் நன்மையை இழக்க நேரிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக் கொள்கிறார். பிறகு புறப்பட்டு (நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.

அறிவிப்பவர் : சல்மான் அல்ஃபார்சீ (ரலி),
நூல் : புகாரி (883)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஜுமுஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் நீ “மௌனமாக இரு!‘ என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (934)

இமாம் உரையாற்றத் தொடங்கிவிட்டால் வானவர்கள் வேறு காரியங்களில் ஈடுபடாமல் அந்த உரையை கேட்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஜுமுஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆத் தொழுகை நடக்கும்) பள்ளி வாசலின் நுழைவாயில் நின்றுகொண்டு முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள்.

நேரத்தோடு
(ஜு முஆவுக்கு) வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும்.

அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவராவார்.

அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும் அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும் அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றாவார்கள்.

இமாம் (உரையாற்றுவதற்காகப்) புறப்பட்டு வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி (வைத்து) விட்டு (அவரது உபதேச) உரையைச் செவி தாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (929)

இமாம் உரையாற்றும் போது அதைக் கேட்பதில் தான் மக்களின் கவனம் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்யலாம் என்றால் மேற்கண்ட நபிமொழிகளை மீறும் நிலை ஏற்படும்.

இமாம் அத்தஹிய்யாத்தில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரை உள்ள நேரமே அந்த நேரம் என்ற கருத்தே சரியாக உள்ளது.

அத்தஹிய்யாத்து அமர்வில் அத்தஹிய்யாத்தும் ஸலவாத்தும் ஓதிய பிறகு நாம் விரும்பிய துஆக்களைச் செய்யலாம். இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

“நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போதுஅத்தஹிய்யா(த்)து -லில்லாஹி… கூறுங்கள். (பின்னர்) நீங்கள் விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: நஸயீ 1151

ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற் றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலாவத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.

அபூதாவூத் (1266)

இந்தக் கருத்து தான் சரியானது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக்குகிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் “அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் குதைபா அவர்களது அறிவிப்பில் “அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்’ என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது

நூல் : முஸ்லிம் (1543)

துஆ ஏற்கப்படும் அந்த நேரம் தொழுகைக்குள் தான் உள்ளது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. தொழுகையில் துஆ செய்யும் நேரங்கள் இரண்டு உள்ளன.

 

ஒன்று சஜ்தா செய்யும் போது துஆ செய்தல். மற்றொன்று

அத்தஹிய்யாத்தில் துஆ செய்தல்.

இமாம் அமர்ந்த்து முதல் என்ற ஹதீஸுடன் இந்த ஹதீஸை இணைத்துப் பார்க்கும் போது சஜ்தாவை இது குறிக்காது என்று தெரிகிறது. இருப்புக்குப் பின் சஜ்தா இல்லை. சஜ்தாவுக்குப் பின்னர் தான் இமாம் இருப்புக்கு வருவார். எனவே அத்தஹிய்யாத்தில் அமர்வதைத் தான் இது கூறுகிறது என்பது உறுதியாகிறது.

புகாரி 935, 5295, 6400 ஆகிய ஹதீஸ்களில் நின்று தொழும் போது என்ற வாசகம் உள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) பற்றிக் குறிப்பிடுகையில், “ஜுமுஆ நாளில்  ஒரு நேரம் இருக்கின்றது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. அ(ந்த நேரத்)தைப் பற்றிக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதை தம் கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்.

நூல் : புகாரி (935)

நின்று தொழும் போது என்று இதில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்படத் தேவை இல்லை.

இது தொழுகையில் நிற்கும் நிலையைக் குறிக்காது. ஏனெனில் நிற்கும் நிலையில் துஆ ஏதும் இல்லை. அது துஆ செய்வதற்கான நேரமும் அல்ல. நிற்குதல் என்பது வணங்குதல் என்ற கருத்திலும் ஏராளமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. தொழுது வணங்கும் போது அடியான் துஆ செய்தால் அது ஏற்கப்படும் என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.
தொழுது வணங்கும் போது இமாம் அமர்ந்த பின்னர் துஆ செய்யும் இடம் ஒன்றே ஒன்று தான் உள்ளது.

அது அத்தஹிய்யாத் அமர்வுதான். அதில் ஜும்மாவில் அத்தஹிய்யாத் அமர்வில் சிறிய நேரம் உள்ளது. அந்த நேரத்தில் நமது துஆ அமைந்து விட்டால் அது கட்டாயம் ஏற்கப்படும் என்று கருத்துக் கொள்வது தான் அனைத்து ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் முடிவாகும்

சஹீஹ் இப்னி ஹுஸைமாவில்

இதே செய்தி இடம்பெற்றுள்ளது. அதில் இமாம் மிம்பரில் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடைப்பட்ட நேரம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சரியான அறிவிப்பு இல்லை.

இதில் அஹ்மது பின் அப்திர் ரஹ்மான் பின் வஹப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் இவரை ஆதாரமாக எடுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். எனவே மனனத் தன்மை பாதிப்புக்குள்ளான இவர் அறிவித்த இந்த அறிவிப்பை ஏற்கக்கூடாது.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed