திரையின்றி பெண்களுக்கு மார்க்க பிரச்சாரம்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மார்க்க நிகழ்ச்சிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடைபெறுகின்றன. ஜும்ஆவும் நடைபெறுகின்றன. இதில் பெண்களும் கலந்து கொள்கின்றனர். சில போது பெண்களுக்கு என்று பிரத்தியேகமான பயான்களும் ஆண்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண்களை விட்டும் பெண்களை பிரிக்கும் விதமாக திரை போட வேண்டும் என்று சிலரும் திரை போடக்கூடாது என்று சிலரும் கூறுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்பு என்ன என்பதனை இப்போது நாம் பார்க்க முயல்வோம்.

முஃமின்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் திரும்பிவிடவேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் நம்முடைய மனோஇச்சைகளைப் புறம் தள்ளி விட்டு அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப் படுவதே இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடமையாகும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார் (அல்குர்ஆன் 33 : 36)

அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம். கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24 : 52)

மேற்கண்ட இறைக்கட்டளைகளை நம்முடைய மனதில் பதிய வைத்துக் கொண்டு மேற்கண்ட கருத்து வேறுபாட்டிற்கான மார்க்கத்தீர்ப்பைக் காண்போம்.

நாம் நம்முடைய முன்மாதிரியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு பயான் செய்யும் போதும் தொழுகையிலும் கண்டிப்பாக திரையிட்டுத்தான் ஆகவேண்டும் என்றால் நபியவர்கள் அவ்வாறு கட்டளையிட்டிருக்க வேண்டும். அல்லது நடைமுறையில் செய்து காட்டியிருக்க வேண்டும்.

ஆனால், பெண்களுக்கு உரையாற்றும் போதும், தொழுகையின் போதும் திரையிடவேண்டும் என்று நபியவர்கள் கட்டளைபிறப்பிக்கவில்லை. இன்னும் தம்முடைய வாழ்நாளில் செய்து காட்டவுமில்லை. இதற்கு மாற்றமாக நபியவர்கள் திரையின்றியே பெண்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்கள். தொழுகை நடத்தியுள்ளார்கள். இதனை பின்வரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஹதீஸ் : 1

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று எழுந்து தொழுதார்கள். (பெருநாள்) தொழுகையை முதலில் நடத்திவிட்டுத் தான் உரை நிகழ்த்தினார்கள். உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்குச் சென்று (தம்முடனிருந்த) பிலால் (ரலி) அவர்களின் கைமீது சாய்ந்தபடி பெண்களுக்கு உபதேசம் புரிந்தார்கள். பிலால் (ரலி) அவர்களே தமது ஆடையை ஏந்திக்கொண்டிருக்க பெண்கள் (தத்தமது) தர்மத்தை அதில் இட்டுக்கொண்டிருந்தனர். ( நூல் : புகாரி 978 )

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள். பாங்கோ இகாமத்தோ இல்லை.

பிறகு பிலால் (ரலி) அவர்கள்மீது சாய்ந்துகொண்டு, இறையச்சத்தைக் கடைப் பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வரியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மர்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, ‘தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்” என்று கூறினார்கள்.

அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து ‘அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்

(நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டனர்.

நூல் : முஸ்லிம் (1607)

நபியவர்கள் பெண்கள் பகுதிக்குச் சென்று எவ்விதத் திரையுமில்லாமல் பெண்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்கள். நபியவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்துள்ளார்கள். மேலும், கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து கேள்வி கேட்டார் என்று வந்துள்ளது. திரையிட்டிருந்தால் இவ்வாறு கூறுவதற்கு இயலாது. மேலும்

பெண்கள் பிலால் (ரலி) அவர்கள் ஏந்திய துணியிலே தர்மங்களைப் போட்டுள்ளார்கள். திரையில்லாமல் இருந்தால் தான் இது சாத்தியமாகும். எனவே, பெண்களுக்கு உரை நிகழ்த்தும் போது திரையில்லாமல் உரை நிகழ்த்தலாம் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.

ஹதீஸ் : 2

அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர். ஆகவேää நாங்கள் தங்களிடம் வந்து

அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்துவிடுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்

‘இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்றுகூடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்றுää அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகு ‘உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக

தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்துவிடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்” என்று சொன்னார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர்

‘அல்லாஹ்வின் தூதரே!

இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலுமா?” என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்கää ‘ஆம்@ இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள் (நூல் : புகாரி 7310)

நபியவர்கள் பெண்களுக்கு என்று பிரத்யோகமாக நாள் நேரத்தை நிர்ணயித்து உரையாற்றியுள்ளார்கள். பெண்களும் நபியவர்களிடம் நேரடியாகக் கேள்விகளைக் கேட்டுள்ளார்கள் . இதிலிருந்தே அங்கு எவ்வித திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed