|| *சகோதரத்துவத்தின் ஆணிவேர்* ||

இஸ்லாமிய வாழ்வியல் நெறி என்பது, அல்லாஹ்வுடனான தனிப்பட்ட உறவோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, அது சக மனிதர்களுடன், குறிப்பாக *சக முஸ்லிமுடன் பேணப்படும் உறவின் ஆழத்திலும் தங்கியுள்ளது*.

ஈமான் என்பது வெறுமனே நாவால் மொழியப்படும் வார்த்தைகளின் தொகுப்பல்ல, மாறாக *அது(ஈமான்) உள்ளத்தில் வேரூன்றி, செயல்களின் மூலம் வெளிப்படும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு.*

இந்த அர்ப்பணிப்பின் மிக உயரிய அளவுகோல்களில் ஒன்றாக, பின் வரும் ஹதீஸ் திகழ்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) ஈமான் கொண்டவர் ஆகமாட்டார்.* (புகாரி 13)

இந்த ஹதீஸ், ஒரு முஃமின் *முழுமையான ஈமானை* அடைவதற்கு மிக எளிமையான, ஆனால் மிகவும் ஆழமான ஒரு நிபந்தனையை முன்வைக்கிறது அது தான் *பிறர்நலன் பேணுதல்*

ஒரு மனிதன் இயல்பாகவே தனக்காக மிகச் சிறந்தவற்றையே விரும்புகிறான்.

தனக்கு *நிலையான ஆரோக்கியம், குறையாத செல்வம், சமூகத்தில் கௌரவம், மன நிம்மதி, பயனுள்ள கல்வி* என இவ்வுலக நன்மைகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக, *மறுமையில் இறைவனின் திருப்தியையும், சுவனத்தின் பேரின்பத்தையும் அடையவே அவன் ஆசைப்படுகிறான்*.

இஸ்லாம் என்ன கூறுகிறது என்றால், *நீ உனக்காக எதையெல்லாம் நன்மையாகக் கருதி விரும்புகிறாயோ, அதே நன்மைகளை உன் சகோதரனுக்கும் மனதார விரும்ப வேண்டும்* என்பதேயாகும்.

இங்கு *சகோதரன்* என்பது இஸ்லாமிய சகோதரத்துவத்தின் அடிப்படையில் இணைந்த ஒவ்வொருவரையும் குறிக்கும்.

இந்த உயர்ந்த பண்பை அடைவதற்குத் தடையாக இருப்பது இரண்டு கொடிய மன நோய்களாகும்,

ஒன்று சுயநலம், *நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும்* என்ற எண்ணம், மற்றொன்று பொறாமை , *அவன் மட்டும் ஏன் நன்றாக இருக்கிறான்? அவனுக்குக் கிடைத்த நன்மை அழிந்துவிட வேண்டும்* என்ற வக்கிரமான சிந்தனை.

இந்த இரண்டு குணங்களும் ஒருவரிடம் இருக்கும் வரை, அவரால் இந்த நபிமொழியின்படி ஒருபோதும் செயல்பட முடியாது.

உண்மையான ஈமான், ஒரு முஸ்லிமை பொறாமையிலிருந்து விடுவிக்கிறது. *அவர், தன் சகோதரனின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்; அவரது வீழ்ச்சியைக் கண்டு வருந்துகிறார்.*

தான் சுவனம் செல்ல விரும்புவது போலவே, *தன் சகோதரனும் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டு சுவனம் செல்ல வேண்டும்* என மனதார ஆசைப்பட்டு, அதற்காகப் பிரார்த்திக்கவும், வழிகாட்டவும் முனைகிறார்.

எனவே, *ஈமான் என்பது தனிப்பட்ட வணக்க வழிபாடுகளில் சுருங்கிவிடுவதில்லை. அது ஒரு சமூகப் பொறுப்புணர்வு.*

எப்போது ஒரு முஸ்லிம், தன் சுயநலத்தின் சுவர்களைத் தகர்த்து, தன் சகோதரனின் நலனைத் தன் நலனைப் போல் நேசிக்கத் தொடங்குகிறாரோ, அப்போதுதான் அவர் நபி (ஸல்) அவர்கள் வரையறுத்த *முழுமையான ஈமான்* என்ற இலக்கை அடைகிறார்.

வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் முழுமையான ஈமான் கொண்டவர்களாக ஆக்கி அருள் புரியட்டும்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *