அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துதல்

ஒருவர் இறந்து விட்டால் அவசரமாக உடனேயே அடக்கம் ‎செய்து விடுவது தான் நல்லது என்ற நம்பிக்கை பலரிடமும் ‎உள்ளது.‎

தல்ஹா பின் அல்பரா (ரலி) அவர்கள் நோயுற்றார்கள். அவரை ‎நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். ‎இவருக்கு மரணம் வந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். ‎இவர் மரணித்தவுடன் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். ஏனெனில் ‎எந்த ஒரு முஸ்லிமின் உடலும் (வீட்டில்) வைத்திருக்கக் கூடாது ‎‎ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: ஹுஸைன் பின் வஹ்வஹ்; நூல்: அபூ தாவூத் 2747‎

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் உர்வா பின் ஸயீத் ‎என்பார் யாரென்று தெரியாதவர். எனவே இது பலவீனமாகும்.‎

மேலும் நோய் விசாரிக்கச் சென்றால் நல்லதையே கூற ‎வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கட்டளையிட்டதை ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம்.‎

ஒரு நோயாளி வீட்டுக்குச் சென்று சீக்கிரம் இவர் போய் ‎விடுவார். போனதும் சொல்லி அனுப்புங்கள் என்பன போன்ற ‎அநாகரிகமான பேச்சை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎சொல்லியிருக்கவே மாட்டார்கள். எனவே இதன் கருத்தும் ‎தவறாகவுள்ளது.‎

உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை வீட்டில் ‎வைத்துக் கொண்டிருக்காதீர்கள். அவரது உடலை உடனே ‎கப்ருக்கு எடுத்துச் செல்லுங்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)‎; நூல்: தப்ரானி 13438

இதன் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் அப்துல்லாஹ் ‎பாபலத்தி என்பவரும் அய்யூப் பின் நஹீக் என்பவரும் இடம் ‎பெறுகின்றனர். இவ்விருவரும் பலவீனமானவர்கள். எனவே ‎இதை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.‎

 

ஜனாஸாவை விரைந்து கொண்டு செல்லுங்கள்! அது நல்லதாக ‎இருந்தால் நல்லதை நோக்கி விரைந்து கொண்டு ‎சென்றவர்களாவீர்கள். கெட்டவரின் உடலாக அது இருந்தால் ‎உங்கள் தோள்களிலிருந்து கெட்டதை (சீக்கிரம்) இறக்கி ‎வைத்தவர்களாவீர்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)‎; நூல்: புகாரி 1315‎

இந்த ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.‎

இந்த ஹதீஸ் சரியானது என்றாலும் இவர்கள் கூறுகின்ற ‎கருத்தை இது தரவில்லை. உடலைத் தோளில் தூக்கி விட்டால் ‎வேகமாக நடந்து செல்ல வேண்டும் என்பதைத் தான் இது ‎கூறுகிறது. உங்கள் தோள்களிலிருந்து  என்ற வாசகத்திலிருந்து ‎இதை அறியலாம். வீட்டில் உடலை வைத்திருப்பதற்கும், இந்த ‎ஹதீஸுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.‎

எனவே உடலை அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்தக் கூடாது ‎என்பதற்கு ஆதாரம் இல்லை.‎

அதிகமான பேர் தொழுகையில் பங்கேற்பது இறந்தவருக்குப் ‎பயன் தரும் என்ற ஹதீஸ்களை வேறு இடத்தில் ‎குறிப்பிட்டுள்ளோம்.‎

அதிகமான மக்கள் சேருவதற்காகத் தாமதம் செய்யலாம் என்ற ‎கருத்து இதனுள் அடங்கியிருக்கிறது.‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனே அடக்கம் செய்து விட ‎வேண்டும் என்று கட்டளையிடாத காரணத்தால் தான் அவர்கள் ‎மூன்றாம் நாள் அடக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடும்.‎

ஆயினும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் ‎கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கட்டளையிட்டுள்ளதால் மூன்று நாட்களுக்கு மேல் உடலை ‎வைத்திருக்கக் கூடாது. ஒரு வீட்டில் உடல் இருக்கும் வரை ‎சோகம் நீடிக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது..‎

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed