அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத எந்த மாமிசத்தையும் உண்ணக் கூடாது. அப்படியானால் மாற்று மதத்தவர்களின் ஹோட்டலில் சாப்பிடுவது கூடுமா?

அல்லாஹ்வின் பெயர் கூறப் படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். (அல்குர்ஆன் 6:121)

“அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத உணவுகளை உண்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே மாற்று மத ஹோட்டலில் மட்டுமல்ல; முஸ்லிம் ஹோட்டலாக இருந்தாலும் அங்கு அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத இறைச்சி பயன்படுத்தப் படுமானால் அவற்றை உண்ணக் கூடாது.

அதே சமயம் மாற்று மதத்தினர் நடத்தும் ஹோட்டல்கள் சிலவற்றில் முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்கி அதைச் சமைக்கின்றனர். அல்லது முஸ்லிம்களை அழைத்து ஆடு, மாடு, கோழி போன்றவற்றை அறுக்குமாறு கூறி அவற்றிலிருந்து உணவு தயாரிக்கின்றனர்.

எனவே இவ்வாறு முஸ்லிம்கள் மூலம் அறுப்பது தெளிவாகத் தெரிந்தால் அந்த ஹோட்டல்களில் இறைச்சி உண்பது தடையில்லை. அவ்வாறு உறுதியாகத் தெரியாத பட்சத்தில், சந்தேகத்திற்கு இடமானதைத் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு இறைச்சி உண்ணக் கூடாது.

பிஸ்மில்லாஹ் கூறி அறுக்க வேண்டும் என்று சொல்லும் போது, பிஸ்மில்லாஹ் சொல்லி யார் அறுத்தாலும் அதை உண்ணலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

பிஸ்மில்லாஹ் என்று ஒரு இந்துவோ, கிருஸ்தவரோ, இறைவனே இல்லை என்று கூறுபவரோ கூறி அறுத்தால் அதை உண்ணக் கூடாது.

அல்லாஹ்வின் பெயரைக் கூறுபவனுக்குரிய தகுதி என்ன?

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதைத் தான் உண்ண வேண்டும் என்பது தெளிவான சொற்களால் கூறப்பட்டு இருந்தாலும் இதில் ஒரு சந்தேகம் எழுகின்றது.

அல்லாஹ்வை நம்பும் சிலர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்களாக உள்ளனர். இவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததாக ஆகுமா? என்பதுதான் இந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகத்துக்கு அடிப்படையும் இருக்கிறது.

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்கள் அல்லாஹ்வுக்காக எந்த வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ் ஏற்க மாட்டான். இணைகற்பித்தால் எல்லா நல்லறங்களும் அழிந்து விடும் என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது.

{إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا} [النساء: 48]

தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

{إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا} [النساء: 116]

தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.

திருக்குர்ஆன் 4:116

{إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ } [المائدة: 72]

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை”

திருக்குர்ஆன் 5:72

{ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ} [الأنعام: 88]

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

திருக்குர்ஆன் 6:88

{وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ} [الزمر: 65]

“நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65

{مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَنْ يَعْمُرُوا مَسَاجِدَ اللَّهِ شَاهِدِينَ عَلَى أَنْفُسِهِمْ بِالْكُفْرِ أُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ وَفِي النَّارِ هُمْ خَالِدُونَ} [التوبة: 17]

இணை கற்பிப்போர் தமது (இறை)மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:17

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காத நிலையில் செய்யும் காரியங்கள் தான் இறைவனால் ஏற்கப்படும் என்பதை இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இதனடிப்படையில் பார்க்கும் போது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தாலும் அதை எப்படி உண்ண முடியும்? என்ற சந்தேகம் சரியானதுதானா?

வணக்க வழிபாடுகளைப் பொருத்த வரை இந்தச் சந்தேகம் சரியானது என்றாலும் பிராணிகளை அறுக்கும் விஷயத்துக்கு இது பொருந்தாது என்பது தான் சரியானதாக தெரிகிறது.

மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களில் அல்லாஹ்வின் பெயரை முஸ்லிம்களாகிய நீங்கள் கூறி அறுத்ததை உண்ணுங்கள் எனக் கூறவில்லை. மாறாக அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள் என்று செயப்பாட்டு வினையாகக் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்; கூறுபவர் யார் என்பது முக்கியமில்லை என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.

இவ்வசனங்கள் மக்காவில் அருளப்பட்டவையாகும். முஸ்லிம்கள் மிக குறைவாக இருந்த அந்தக் காலத்தில் முஸ்லிம்களின் உறவினர்கள் இணைகற்பிப்பவர்களாக இருந்தனர். இணை கற்பிப்பவர்களைச் சார்ந்தும் இருந்தனர். அவர்கள் தரும் மாமிச உணவுகளை உண்ணக் கூடிய நிலையை அவர்கள் சந்தித்தனர்.

அவர்கள் சந்தித்த பிரச்சனைக்குத் தீர்வாகவே இவ்வசனங்கள் அருளப்பட்டன.

இணைகற்பித்தவர்கள் தரும் மாமிச உணவை உண்ணக் கூடாது என்பது அல்லாஹ்வின் நோக்கமாக இருந்தால் முஸ்லிம்கள் அறுத்ததை மட்டும் உண்ணுங்கள் என்றோ, நீங்கள் அறுத்ததை மட்டும் உண்ணுங்கள் என்றோ காஃபிர்கள் அறுத்ததை உண்ணாதீர்கள் என்றோ அல்லது இது போன்ற தெளிவான வார்த்தைகளால் அல்லாஹ் கட்டளையிட்டு இருப்பான்.

ஆனால் அவ்வாறு கூறாமல் அறுப்பவர் யார் என்பதை அலட்சியப்படுத்தும் வகையில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இணை கற்பித்துக் கொண்டு இருந்த அன்றைய மக்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியும் அறுத்து வந்தனர். அல்லாஹ்வின் பெயர் கூறாமலும் அறுத்து வந்தனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுத்தால் அதை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வின் பெயரைக் கூறி அவர்கள் அறுத்ததை உண்ணுங்கள் என்ற கருத்தைத் தரும் வகையில் மேற்கண்ட வசனங்கள் அமைந்துள்ளன.

மேற்கண்ட மூன்று வசனங்களும் முஸ்லிம்களுக்கு இருந்த ஒரு தயக்கத்தை நீக்கும் வகையில் அமைந்துள்ளன. நீங்கள் எப்படி உண்ணாமல் இருக்கலாம்? உண்ணாமலிருக்க உங்களுக்கு என்ன வந்தது? என்ற வாசகங்களில் இருந்து இதை அறியலாம்.

முஸ்லிம்களுக்கு எதில் தயக்கம் இருந்திருக்கும்?:

அல்லாஹ்வின் பெயரைக் கூறித்தான் முஸ்லிம்கள் அறுப்பார்கள். அதை உண்ணலாமா என்ற சந்தேகமோ, தயக்கமோ அன்றைய முஸ்லிம்களுக்கு இருந்திருக்க முடியாது.

எதில் அவர்களுக்குத் தயக்கமும், சந்தேகமும் இருந்திருக்கும்? இணைகற்பிப்பவர்கள் அறுத்து விட்டார்களே? அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் அவர்கள் இணை கற்பித்து வருகிறார்களே? அதை எப்படி உண்பது என்ற தயக்கம் தான் இருந்திருக்கும்.

இந்தத் தயக்கத்தைப் போக்கும் வகையில் தான் இவ்வசனங்களின் வாசக அமைப்பு அமைந்துள்ளது.

மக்காவில் வாழ்ந்த இணை கற்பிப்பவர்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி எப்படி அறுத்திருப்பார்கள்? அவர்கள் தங்களின் தெய்வங்கள் பெயரைச் சொல்லித்தானே அறுத்திருப்பார்கள்? என்ற சந்தேகம் எழலாம். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறாமலும் அறுப்பார்கள். அல்லாஹ்வின் பெயர் கூறியும் அறுப்பார்கள் என்பதை திருக்குர்ஆனிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

{ وَأَنْعَامٌ حُرِّمَتْ ظُهُورُهَا وَأَنْعَامٌ لَا يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا افْتِرَاءً عَلَيْهِ سَيَجْزِيهِمْ بِمَا كَانُوا يَفْتَرُونَ} [الأنعام: 138]

சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.

திருக்குர்ஆன் 6 : 138

”சில கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம்” என்ற வாசகத்தில் இருந்தே ”மற்ற சில கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவார்கள்” என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

சில கால்நடைகளை அறுக்கும் போது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறாமல் இருப்பதை அல்லாஹ் இடித்துரைக்கிறான். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அது வரவேற்கத்தக்கது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

இதே அடிப்படையை பின்வரும் நபிமொழியும் போதிக்கின்றது.

سنن النسائي (7/ 226(

4403 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:«مَا أَنْهَرَ الدَّمَ، وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ، إِلَّا بِسِنٍّ أَوْ ظُفُرٍ»

இரத்தத்தை ஓடச் செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர.

அறிவிப்பவர் : ராஃபிவு பின் கதீஜ் (ரலி)

நூல் : நஸாயீ (4403) புகாரி (2488)

மேற்கண்ட நபிமொழியிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும் என்பதுதான் கட்டளையாகக் கூறப்பட்டுள்ளதே தவிர அதனைக் கூறுபவர் யார்? அவருடைய கொள்கை என்ன? என்பதைக் கவனிப்பதற்கு அல்லாஹ் கட்டளையிடவில்லை.

எனவே அல்லாஹ்வை நம்பிய நிலையில் அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்பவர் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் நாம் தாராளமாகச் சாப்பிடலாம் என்ற முடிவிற்கே நாம் வரமுடியும். இதுதான் இறைவசனத்தின் அடிப்படையில் சரியான முடிவாகும்.

அபூஜஹ்ல் போன்றவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்திருந்தால் அதையே சாப்பிடலாம் என்றால் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள், தர்காவழிபாடு செய்பவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் அதையும் உண்ணலாம் என்பது தான் சரியான கருத்தாக தெரிகிறது.

நமது நாட்டிலும் முஸ்லிம் அல்லாத மக்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் உண்ணலாமா என்ற சந்தேகத்தையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இணை கற்பித்த மக்காவாசிகளுக்கும், நமது நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

மக்காவில் வசித்த இணைகற்பித்தவர்கள் அல்லாஹ் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பினார்கள். அவன் தான் படைத்தவன் என்றும், எல்லா அதிகாரமும் அவனுக்கே உரியது என்றும் நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்பதற்காகவே குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம்.

{قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ } [يونس: 31]

‘வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா’ என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

{قُلْ لِمَنِ الْأَرْضُ وَمَنْ فِيهَا إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (84) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ} [المؤمنون: 84، 85]

‘பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கே’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘சிந்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:84,85

{قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ (86) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَتَّقُونَ } [المؤمنون: 86، 87]

‘ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?’ எனக் கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா;?’ என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:86,87

{قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (88) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّى تُسْحَرُونَ} [المؤمنون: 88، 89]

‘பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’ என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:88,89

‘வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். அப்படியாயின் ‘எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?’

திருக்குர்ஆன் 29:61

‘வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 29:63

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 31:25

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 39:38

‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்’ எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 43:9

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

திருக்குர்ஆன் 43:87

இவ்வசனங்கள் கூறுவது என்ன? மக்காவில் வாழ்ந்த இணை கற்பித்தவர்கள் அல்லாஹ்வைத் தான் படைத்தவன் என்று நம்பினார்கள் என்று தெளிவுபடக் கூறுகின்றன.

அப்படியானால் எதற்காக குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்? அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:18

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 39:3

மக்காவில் வாழ்ந்த அன்றைய மக்கள் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் அல்லாஹ்வை நம்பி இருந்தார்கள். அவன் தான் மாபெரும் ஆற்றல் மிக்கவன் என்று நம்பினார்கள். அத்துடன் குட்டித் தெய்வங்களையும் ஏற்படுத்தி அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்று கருதி அவர்களை வணங்கினார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

நமது நாட்டில் உள்ள இணைகற்பிக்கும் பிற மதத்தினருக்கு இந்த நம்பிக்கை இல்லை. அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை அறவே இல்லை. ஒரு கடவுள் தான் உலகுக்கு இருக்கிறான் என்ற நம்பிக்கையும் இல்லை. எனவே அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்க மாட்டார்கள். அல்லாஹ் என்ற சொல்லை அவர்கள் கூறினாலும் அதன் பொருளைக் கருத்தில் கொள்ளாமல் மந்திரச் சொல்லாக மட்டுமே சொல்வார்கள். கிளிப்பிள்ளை அல்லாஹ்வின் பெயரைச் சொல்வதற்கு ஒப்பாக இது அமைந்துள்ளது. எனவே அல்லாஹ் என்று ஒருவன் இருப்பதை ஏற்றுக் கொள்ளாமல் அல்லாஹ்வின் பெயர் கூறி ஒருவர் அறுத்தால் அதை உண்ணக் கூடாது.

நமது நாட்டில் உள்ள பிற மதத்தில் உள்ளவர்கள் அகில உலகுக்கும் ஒருகடவுள் தான் இருக்கிறான் என்று மக்காவாசிகள் நம்பியது போல் நம்பி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அதை உண்ணலாம்.

மக்காவாசிகள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த காரணத்தால் அவர்கள் மறுமையில் நிரந்தர நரகை அடைவார்கள் என்றாலும் உலகில் அவர்களின் பிரார்த்தனையைக் கூட அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 29:65

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

திருக்குர்ஆன் 31:32

நெருக்கடியான நேரத்தில் துன்பத்தைப் போக்குமாறு பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அதை ஏற்று அவர்களுக்கு உதவிபுரிகிறான் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

இதுபோல் தான் அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததையும் அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான். அவர்களின் நல்லறங்கள் பாழாகும் என்பது வேறு. அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததை உண்ணலாம் என்பது வேறு.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed