பகைவரையும் நேசராக்கிய மன்னிக்கும் தன்மை

உலகத்தில் முதல் எதிரியாக நபிகள் நாயகத்தையும், வெறுக்கும் மார்க்கமாக இஸ்லாத்தையும், பகை நாடாக மதீனாவையும் கருதினார் ஸுமாமா பின் உஸால். அன்பு மார்க்கமாம் இஸ்லாத்தையும், அதைப் போதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அம்மார்க்கத்தைப் பின்பற்றும் அருமைத் தோழர்களையும் சில நாட்கள் பார்த்த ஸுமாமாவின் உள்ளம் இஸ்லாத்திற்கு முன்னால் அடிபணிந்தது. இந்த சுமாமாவை மாற்றியது நபிகள் நாயகத்தின் மன்னிக்கும் குணம். இதோ வரலாற்றில் என்றும் மங்காத பிரகாசமாய் ஒளிவீசும் சுமாமாவின் வரலாற்றைப் பாருங்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ‘நஜ்த்’ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் ‘பனூ ஹனீஃபா’ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, (உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய், ஸுமாமாவே? என்று கேட்டார்கள். அவர், நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்.

(என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள் என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார். மறு நாள் வந்த போது அவரிடம், ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள் என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்த போது, நீ என்ன கருதுகிறாய்?

ஸுமாமாவே! என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன் என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள் என்று சொன்னார்கள்.

உடனே ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை’ என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், ‘முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்’ என்றும் நான் உறுதி கூறுகிறேன் என்று மொழிந்துவிட்டு, முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது.

அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை.

ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர் என்று சொல்லிவிட்டு, மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், நீ மதம் மாறிவிட்டாயா? என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.)

மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 4372

வஞ்சகமாய் கொன்ற வஹ்ஷியை வாஞ்சையாய் மன்னிக்கும் தன்மை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நேசத்திற்குரியவரான அன்னாரின் சிறிய தந்தையார் ஹம்சா (ரலி) அவர்களை உஹது யுத்தத்திலே வஞ்சகமாய்க் கொன்றார் வஹ்ஷி அவர்கள். ஹம்சா (ரலி) அவர்களின் உடல் எதிரிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டது.

உடலைக் கண்டதும், அதன் நிலையைப் பார்த்ததும் கண்ணீர் வடித்தது நாயகத்தின் கண்கள். சிறிய தந்தையைக் கொன்றதற்காக எதிரிகளில் எழுபது பேரைப் பழிவாங்குவேன் என்று சீற்றம் கொண்டார்கள். மன்னிக்கும் மார்க்கத்தைப் போதிக்க வந்த நாயகமே சீற்றம் கொள்ளலமா? வரம்பை மீறலாமா? பொறுமையின் வடிவம் நிதானம் தவறலாமா?

மன்னிப்பாளர்களுக்கெல்லாம் மிகப் பெரும் மன்னிப்பாளனான அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான். அதில் பொறுமையைப் போதித்தான். வரம்பு மீறுவதை எச்சரித்தான்.

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது. பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ்விடமே உள்ளது. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கும் ஆளாகாதீர்.

(அல்குர்ஆன்:16:126,127)

நபிகள் நாயகத்தின் நேசத்திற்குரிய ஹம்சா (ரலி) அவர்களைக் கொன்ற வஹ்ஷியையும் இஸ்லாம் கவர்ந்தது. அவரைச் சத்தியத்தின் போராளியாக்கியது. வஹ்ஷியையும் மன்னித்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். வஹ்ஷியின் வரலாற்றை அவரின் வாய்மொழியாகக் கேட்போம்.

நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை (கவனிக்காமல்) நெருங்கி வந்த போது, எனது ஈட்டியை அவரது மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன்.

அது (பாய்ந்து) அவரது புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அது தான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்ற போது நானும் அவர்களுடன் திரும்பினேன். மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன்.

(மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்று விட்டேன். தாயிஃப் வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.

அப்போது, என்னிடத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தர மாட்டார்கள்; (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்) என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன்.

என்னை அவர்கள் கண்ட போது, நீ வஹ்ஷி தானே? என்று கேட்டார்கள். நான், ஆம் என்று கூறினேன். நீ தானே ஹம்ஸாவைக் கொன்றாய்? என்று கேட்டார்கள். நான், உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்தது உண்மைதான் என்று கூறினேன். அப்போது அவர்கள், (உன்னைக் காணும் போது என் பெரிய தந்தை ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னை விட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட போது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பொய்யன் முஸைலமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களிடம் போர் புரிவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் பின் வலீத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), நிச்சயம் நான் முஸைலமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன்.

அவனை நான் கொல்ல(வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடுசெய்யலாம் என்று கூறிக் கொண்டேன். (அபூபக்ர் அவர்கள் அனுப்பிய போர்ப்படையிலிருந்த) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன்.

அப்போது தான் அவனுடைய விஷயத்தில் நடந்தது நடந்து முடிந்தது. அப்(போரின்) போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்று கொண்டிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன் மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) எனது ஈட்டியை எறிந்தேன்.

நான் அந்த ஈட்டியை அவனது இரு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனது பின் தோள்களுக்கிடையிலிருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார். தமது வாளால் அவனது உச்சந்தலை மீது ஓங்கி வெட்டி விட்டார். (அவன்தான் முஸைலமா.)

நூல்: புகாரி 4072

நபிகள் நாயகத்தின் மன்னிக்கும் தன்மைக்கு இன்னும் ஏராளமான சான்றுகளைக் கூறலாம். மக்கா வெற்றியின் போது எதிரிகள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கினார்கள். தன்னைப் பைத்தியம் என்றும், சூனியக்காரர் என்றும், சந்ததியற்றவர் என்றும் பழித்தவர்களையெல்லாம் மன்னித்தார்கள். அத்தன்மை தான் 23 ஆண்டுகளில் காட்டுமிராண்டிக் கூட்டத்தையும் உலகிலேயே கியாமத் நாள் வரை தோன்ற முடியாத சிறந்த தலைமுறையாக உருவாக்கியது.

சத்தியவாதிகளை வார்த்தெடுத்தது. அமைதி உலகத்தை அமைத்து. இத்தன்மையை நாமும் பெற்றால் நம்முடைய தலைமுறையும் சத்தியத்திற்கு சாட்சியாளர்களாய் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை, இன்ஷா அல்லாஹ். இன்னா செய்தாருக்கும் நன்னயஞ் செய்பவர்களாய், உண்மையான முஃமின்களாய் அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed