நேரமில்லை நேரமில்லை….

மனிதன் இவ்வுலகத்தில் இறைவனை அறிந்து கொள்ளவும் இறைச் சட்டங்களைச் செயல்படுத்தவும் அவனது அறிவுரைகளின் படி நடக்கவும் போதிய காலங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். ஆனால் மனிதன் நேரமில்லை, நேரமில்லை என்று கூறிக் கொண்டு இறைக் கட்டளைகளையும் நற்காரியங்களையும் அலட்சியப்படுத்தி வருகின்றான்.

நேரமில்லை என்று சொல்பவர்கள், உண்மையாக இவ்வாறு சொல்கிறார்களா? அல்லது தட்டிக் கழிப்பதற்காக இவ்வாறு சொல்கிறார்களா? என்பதை அவர்களின் செயல்பாடுகள் தெளிவுபடுத்துகின்றன.

நேரமில்லை என்று சொல்பவர்கள் மணிக்கணக்கில் நாடகங்களைப் பார்க்கிறார்கள் பல மணி நேரம் கிரிக்கெட் பார்க்கிறார்கள் விடிந்தது கூடத் தெரியாமல் உறங்குகிறார்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்கிறார்கள்ளூ சின்னத்திரை, பெரிய திரைகளில் பல மணி நேரம் சினிமா பார்க்கிறார்கள். இப்படி ஏராளமான நேரங்களை வீணடிப்பவர்களுக்கு இறை நினைவுக்கும் அவனது கட்டளைகளை நிறைவேற்றவும் நேரமில்லை என்று கூறுவது உண்மையாக இருக்குமா?

விலை மதிப்பற்ற செல்வமான இந்தக் காலத்தை வீணடிப்பது பெருங்குற்றமாகும். இதற்காகக் கடுமையான தண்டனையை மறுமை நாளில் பெற நேரிடும். தண்டனையிலிருந்து தப்பிக்கவும் முடியாது.

‘எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம்’ என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். ‘படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ் நாளை அளித்திருக்கவில்லையா? உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை’ (என்று கூறப்படும்)

(அல்குர்ஆன் 35:37)

மேற்கூறிய வசனம் நமக்கு உணர்த்தும் கருத்து என்ன?

நல்வாழ்க்கை அமைத்துக் கொள்ள இவ்வுலகில் போதுமான நேரத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான்.

காலத்தை வீணடிக்காமல் இருக்கவும் நல்லறங்களில் ஈடுபடவும் செய்ய வேண்டுமென இறைத்தூதர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

காலத்தை தேவையற்றவற்றில் செலவழிக்கக் கூடாது.

காலத்தை வீணடிப்பது பெருங்குற்றம். அதற்குரிய தண்டனை நரகமே!
மறுமை வந்து விட்டால் அப்போது தண்டனையிலிருந்து யாரும் காப்பற்ற உதவி செய்ய முடியாது.

எனவே நமக்கு கிடைத்த நேரங்களை நற்காரியங்களில் பயன்படுத்த வேண்டும். வீணான காரியங்களில் நேரங்களை கழிக்கக் கூடாது. இறைவன் கொடுத்த அருட்கொடைகளில் ஒன்று தான் ஓய்வு நேரமாகும். இவற்றைப் பெரும்பாலும் பலர் வீணடிக்கவே செய்கின்றனர்.

‘மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

1. ஆரோக்கியம்,

2. ஓய்வு’

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி (6412)

நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போதும், ஓய்வுகள் கிடைக்கும் போதும் நற்காரியங்களில் அதிகம் ஈடுபட வேண்டும். குறிப்பாக இஸ்லாத்தின் மூல ஆதாரங்களில் முதன்மையான திருக்குர்ஆனை, பார்த்து ஓதும் நிலையையாவது ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை மக்களுக்கு திருக்குர்ஆனை பார்த்துக் கூட ஓதத் தெரியவில்லை என்பது அதிர்ச்சியான உண்மையாகும். இஸ்லாத்தை ஏற்றுப் பல வருடங்களாக, ஏன் பரம்பரை பரம்பரையாக இஸ்லாத்தில் இருப்பவர்களுக்கும் திருக்குர்ஆனை பார்த்துக் கூட ஓதத் தெரியவில்லையானால் அவர்கள் இஸ்லாத்தின் மீதும் திருக்குர்ஆன் மீதும் எவ்வளவு பற்று வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

‘குர்ஆனைத் தாமும் கற்று, பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)

நூற்கள்: புகாரி (5027), திர்மிதி (2832, 2834), அபூதாவூத் (1240), அஹ்மத் (469)

மற்ற மொழிகளைக் கற்பதில் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காடு முயற்சி செய்தால் கூட திருக்குர்ஆனைக் கற்றிருக்கலாம். ஆனால் அந்த அக்கறை மறுமை வெற்றிக்கு வித்திடும் திருக்குர்ஆனில் யாரும் காட்டுவதில்லை.இந்த நிலையை இஸ்லாமியர்கள் மாற்றவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தவர்கள் இருக்கவேண்டும். தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

வீட்டில் உள்ள அனைவரும் அழகிய முறையில் திருக்குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களாகவும் அதை தினமும் பொருளறிந்து ஓதுபவர்களாகவும் மாற வேண்டும். மறுமை நாளில் கைசேதப்படுவதற்கு முன், கிடைத்த நேரத்தை நற்காரியங்களில் பயன்படுத்துவோம் மறுமை நாளில் வெற்றி பெறுவோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed