இவ்வசனத்தில் (2:238) நடுத்தொழுகையைப் பேணுமாறு கூறப்படுகிறது.

நடுத் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர். (நூல்: புகாரி 6396)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடுத் தொழுகைக்கு விளக்கம் தந்த பின் மற்றவர்களின் கருத்தை நாம் கவனத்தில் கொள்ளக் கூடாது.

இவ்வசனம் மற்றொரு விஷயத்தையும் கூறுகிறது.

முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பதையும், இதற்கு ஏராளமான நபிமொழிகள் சான்றாகவுள்ளதையும் நாம் அறிவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் 14 நூற்றாண்டாக இது தொடர்ந்து நடைமுறையிலும் இருந்து வருகிறது.

ஆயினும் முஸ்லிம்களில் உள்ள சில அறிவீனர்கள் குர்ஆனில் ஐந்து வேளைத் தொழுகை என்று கூறப்படவில்லை. எனவே ஐந்து வேளைத் தொழுகை என்பது குர்ஆனுக்கு எதிரானது என்று நினைக்கின்றனர்.

ஐந்து வேளைத் தொழுகை என்ற சொல் குர்ஆனில் இல்லை என்பது உண்மைதான். ஆனாலும் ஐந்து வேளைத் தொழுகை உண்டு என்பது ஏராளமான வசனங்களில் மறைமுகமாகச் சொல்லப்பட்டு உள்ளது. அது போன்ற வசனங்களில் இவ்வசனமும் ஒன்றாகும். இவ்வசனம் ஐந்து வேளைத் தொழுகை இருப்பதை நேரடியாகக் கூறாவிட்டாலும் குறைந்தது ஐந்து வேளைத் தொழுகை இருப்பதை மறைமுகமாகக் கூறுகிறது.

அது எப்படி என்று பார்ப்போம்.

தொழுகைகளையும், நடுத்தொழுகையையும் பேணுமாறு இவ்வசனம் கூறுகிறது.

தொழுகைகள் என்பது பன்மையாகும். அரபு மொழியில் இரண்டைக் குறிக்க இருமை என்ற தனிச் சொல்லமைப்பு உள்ளதால் பன்மைக்கு குறைந்தது மூன்று இருக்க வேண்டும். மூன்றுக்குக் குறைவாக அரபு மொழியில் பன்மை இல்லை.

“(குறைந்தபட்சம் மூன்று) தொழுகைகளையும் நடுத்தொழுகையையும்” என்று கூறும்போது மொத்தம் நான்கு தொழுகைகள் என்றாகி விடுகின்றது.

நடு என்று கூறுவதாக இருந்தால் அது ஒற்றைப் படையாகத்தான் இருக்க வேண்டும். நான்கில் எதையும் நடு எனக் கூற முடியாது. ஐந்து இருந்தால் தான் அதில் ஒன்றை நடு எனக் கூற முடியும். எனவே மொத்த தொழுகைகள் ஐந்து என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

மூன்று தொழுகைகள் என்று வைத்துக் கொண்டால் நடுத் தொழுகை என ஒரு தொழுகையைக் குறிப்பிட முடியுமே என்று சிலர் நினைக்கலாம். மூன்றில் ஒன்றை நடு எனச் சொல்ல முடியும் என்பது உண்மையே. ஆனால் தொழுகைகள் என்று பன்மையாகக் கூறப்படுவதுடன் நடுத்தொழுகை பற்றி தனியாகக் கூறப்படுவதால் நடுத்தொழுகையை நீக்கி விட்டுக் குறைந்தது மூன்று தொழுகைகள் என்பது தான் இவ்வசனம் சொல்லும் கருத்தாகும்.

பன்மையையும், நடு என்ற சொல்லையும் ஒரு சேரக் கவனிக்கும்போது ஐந்து வேளைத் தொழுகை உண்டு என்ற கருத்து இவ்வசனத்தில் அடங்கியுள்ளதை அறியலாம்.

இவ்வசனத்தை சிலர் தவறாக விளங்கிக் கொண்டு ஒரு நாள் என்பது காலையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது எனக் கூறுகின்றனர்.

சூரியன் மறைந்ததில் இருந்து நாள் ஆரம்பமாகிறது என்று நாம் அறிந்து வைத்துள்ளோம். அதற்கு ஆதாரங்களும் உள்ளன. நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகை என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளதால் முதல் தொழுகை சுபுஹ் தொழுகை என்று ஆகிறது. எனவே நாள் சுபுஹ் நேரத்தில் இருந்து ஆரம்பமாகிறது என்பது அவர்களின் வாதம். இந்த வாதம் முற்றிலும் தவறானது என்பதை 361வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed