தந்தையின் சொத்தை எவ்வாறு பிரிப்பது?

என் தந்தைக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். என் தந்தையின் தாயும் உள்ளார். முதல் மனைவிக்கு ஒரு ஆண் பிள்ளையும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இரண்டாம் மனைவிக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கின்றது. இவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கின்றார்கள். இவர்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. என் தந்தையின் சொத்தை இவர்களுக்கு எவ்வாறு பங்கு வைப்பது?

இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.

அவருக்கு (இறந்தவருக்கு)ச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு.

திருக்குர்ஆன் 4:11

இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிகள் இருவருக்கும் சேர்த்து எட்டில் ஒரு பாகம் தரப்பட வேண்டும்.

உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியர்களுக்கு உண்டு.

திருக்குர்ஆன் 4:12

மீதமுள்ள சொத்துக்கள் மகனுக்கு இரண்டு பங்குகள், மகளுக்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும்.

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

திருக்குர்ஆன் 4:11

எனவே தாய்க்கு ஆறில் ஒரு பாகமும், இரண்டு மனைவிகளுக்கும் சேர்த்து எட்டில் ஒருபாகமும் உண்டு. 6 ம் 8 ம் மீதமின்றி வகுபடும் பொதுவான ஒரு எண்ணை நாம் தேர்வு செய்ய வேண்டும். அதாவது 24 என்ற எண்ணால் 6 ம் 8 ம் மீதமின்றி வகுபடும் என்பதால் மொத்த சொத்தை 24 பங்குகளாக வைத்துக் கொள்வோம்.

தாய்க்கு ஆறில் ஒன்று என்ற கணக்கில் பார்த்தால் 24 பங்குகளில் 4 பங்குகள் தாய்க்கு உண்டு.

இரண்டு மனைவிமார்களுக்கும் எட்டில் ஒன்று என்ற கணக்கில் பார்த்தால் 24 பங்குகளில் 3 பங்குகள் கிடைக்கும்.

இந்த மூன்று பங்குகளை சமஅளவில் பாதியாக இரண்டு மனைவிமார்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும்.

24 பங்குகளில் தாய்க்கும், மனைவிமார்களுக்கும் சேர்த்து 7 பங்குகள் தரப்பட்டுவிட்டதால் தற்போது 17 பங்குகள் எஞ்சியுள்ளன. இந்த 17 பங்குகளை எஞ்சியுள்ள சொத்தாக வைத்துக் கொள்வோம்.

இறந்தவருக்கு மொத்தம் மூன்று பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் இருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். எனவே ஒரு ஆணை இரண்டு பெண்ணாகக் கணக்கிட்டால் எஞ்சியுள்ள சொத்தை 5 பங்காக வைத்து ஆணுக்கு இரண்டு பங்குகளையும் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒரு பங்கு வீதம் 3 பங்குகளையும் கொடுக்க வேண்டும்.

17 பங்கை ஐந்து பாகமாகப் பிரிக்க முடியாது என்பதால் மொத்த பங்கை 24 ஆக ஆக்காமல் 24*5=120 பங்குகளாக வைத்தால் பங்கு வைப்பது எளிதாகும்.

மொத்த சொத்தை 120 பங்காக வைத்து அதில் எட்டில் ஒரு பங்கு 15 ஆகும். இது இரு மனைவிகளுக்கும் உரியது.

120 ல் ஆறில் ஒன்று 20 ஆகும் இது தாய்க்கு உரியதாகும்.

மீதி 85 பங்குகளில் ஆணுக்கு 34 பங்கும், பெண்களுக்கு தலா 17 வீதம் 51 கொடுத்தால் கணக்கு சரியாகி விடும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed