—————————————————————-

*சொர்க்கவாசி பட்டியலில் இடம்பெறுவோம்*

—————————————————————-

*இறைவன் ஒருவன் என்பதை அறிந்த நிலையில் மரணித்தால்*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை* என்று யார் (மனமார) அறிந்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வார்.

இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. *(முஸ்லிம் 43)*

*அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் மரணித்தால்*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் *“யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்து விடுகிறாரோ அவர் நிச்சயமாக நரகம் செல்வார்”* என்று கூறியதை நான் கேட்டேன். நான் (அதே கருத்தை) *“யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்”* என்று கூறினேன்.

*(முஸ்லிம் 150)*

*அல்லாஹ்வின் பெயர்களை மனனம் செய்தால்*

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது பெயர்கள்* உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) *மனனமிட்டவர் சொர்க்கம் செல்வார்.* மேலும், அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

*(முஸ்லிம் 5198)*

*காலை மாலையில் இந்த துஆவை* ஓதினால்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

*‘அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. ல இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்ததஅத்து, அபூ உ லக்க பி நிஅமத்திக்க, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃபக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக் ஃபிருத் துனூப இல்லா அன்த்த. அஊது பிக்க மின் ஷர்ரி ஸனஅத்து’* என்பதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல் ஆகும்.

(பொருள்: *அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.*

மாலை நேரத்தில் ஒருவர் இதைச் சொல்லிவிட்டு (அன்று மாலையே) அவர் இறந்தால் அவர் (சொர்க்கம் செல்வார்’ அல்லது *சொர்க்கவாசியாவார்’* காலை நேரத்தில் ஒருவர் (இதைச்) சொல்லிவிட்டு அன்று பகலிலேயே இறந்தால் அதே போன்றுதான் (அவரும் சொர்க்கம் செல்வார்)

என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

*(புகாரி 6323)*

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

என் சமுதாயத்தாரில் *எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்*.

*(புகாரி 6472)*

*நபிகளாருக்கு கீழ்படிந்தால்*

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், *‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’* என்று கூறினார்கள். மக்கள், *‘இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?’* என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், *‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்’* என்று பதிலளித்தார்கள்.

*( புகாரி 7280)*

*பஜ்ர் மற்று அஸர் தொழுகையை முறையாக தொழுதால்*

பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது *பஜ்ருத், அஸர் தொழுகைகளை முறையாகத்) தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார்’* என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். *(புகாரி 574)*

*நல்லறங்கள் செய்வோர்*

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். *(அல்குர்ஆன் 4:124)*

*இறைவனை அஞ்சியோர்*‏

தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் *“உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!”* என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்.

*(அல்குர்ஆன் 39:73)*

___________

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed