சந்திரன் பிளந்தது

இவ்வசனத்தில் (54:2) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறியபோது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சந்திரனை இரண்டாகப் பிளந்து காட்டினார்கள். அனைவரும் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் மக்களிடம் கூறினார்கள்.

(பார்க்க: புகாரி 3636, 4864, 4865)

இந்நிகழ்ச்சியைத்தான் இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது. பூமியின் துணைக்கோளாக அமைந்துள்ள சந்திரனைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள், சந்திரன் இரண்டாகப் பிளப்பதும், பிறகு ஒன்று சேர்வதும் சாத்தியமற்றது என்று கருதலாம்.

ஆனால் திருக்குர்ஆனில் இறைவன் தனது தனிப்பெரும் ஆற்றலால் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறும்போது, அதற்கான சான்றுகளையும் உலகில் விட்டு வைக்கிறான்.

நூஹ் நபியின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தைச் சொல்லும்போது அவர் பயணித்த கப்பலைச் சான்றாக விட்டு வைத்திருக்கிறோம் என்று இறைவன் குறிப்பிடுகிறான். அந்தக் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் சந்திரன் பிளந்ததைக் கூறி விட்டு, இது ஓர் அற்புதம் என்பதையும் உறுதி செய்து விட்டு, அனைத்தும் பதிவாகியிருக்கின்றது என்று இவ்வசனத்தில் கூறுகிறான்.

சந்திரன் பிளந்த நிகழ்வு தந்திரமோ, அல்லது கண்கட்டு வித்தையோ அல்ல. அது பதிவாகியிருக்கின்றது என்று கூறுகிறான்.

நிலவில் முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு இறங்கியபோது அவர் பயணித்த விண்கலம் நிலவைப் பல கோணங்களில் ஏராளமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.

அவற்றுள் ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஓர் ஆப்பிளை இரண்டாக அறுத்து மீண்டும் இணைத்தது போன்ற கோடு இருந்தது.

இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு அரபியன் பிளவு என்று பெயரிட்டனர். காரணம், சந்திரன் பிளந்தது என்ற நம்பிக்கை அரபியரிடம் (முஸ்லிம்களிடம்) இருந்தது தான்.

முஸ்லிம்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் பிளவு அமைந்துள்ளது என்பதே இதன் பொருளாகும்.

இறைவன் கூறுவது போன்று, சந்திரன் பிளந்ததற்கான சான்றும் சந்திரனிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தக் கண்டுபிடிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இந்தத் தகவல் அமெரிக்க அரசால் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட்டர் என்ற மாத இதழில் புகைப்பட சான்றுகளுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கியபோது வெளிவந்தது.

சந்திரன் பிளந்தது பற்றியும், அதற்கான சான்று சந்திரனில் பதிவாகியுள்ளது பற்றியும் திருக்குர்ஆன் அறிவித்திருப்பது இது இறைவேதம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

சந்திரனில் பிளவு ஏதும் இல்லை என்று தற்போது நாசா விஞ்ஞானிகள் கூறுவதாகச் சிலர் இதை மறுக்கின்றனர். இப்போது நிலவில் பிளவு தென்படவில்லை என்பதால் அப்பல்லோ விண்கலம் மூலம் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய போது எடுத்த புகைப்படங்களும், அதில் காணப்பட்ட பிளவும், அரபியன் பிளவு என்று அதற்கு பெயரிட்டதும், அமெரிக்க அரசால் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட் பத்திரிகையில் இந்த விபரம் வெளியிடப்பட்டதும் பொய்யாகாது. அமெரிக்கன் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் அப்படி ஏதும் வெளியிடப்படவில்லை என்று நாசா மறுக்கவில்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed