குர்ஆனின் ஸஜ்தா செய்ய வேண்டிய ஸஜ்தாவுக்குப் பின் ஸலாம் உண்டா?

இல்லை

தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.

இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தா செய்ய வேண்டும்? என்று நாம் பார்த்தால் தற்போது 14 வசனங்கள் ஸஜ்தா வசனங்களாக நடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம்.

ஆனால் இதற்குச் சான்றாக வைக்கப்படும் ஹதீஸ்கள் ஆதாரமற்றதாகும். அப்படியானால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த ஸஜ்தாக்கள் எத்தனை? என்று பார்க்கும் போது, நான்கு வசனங்களை ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக அறிய முடிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு (53வது) அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்து தமது நெற்றிக்குக் கொண்டு சென்று, இவ்வாறு செய்வது எனக்குப் போதும் என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி 1067, 1070

இதே கருத்து புகாரியில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.

ஸாத் (38வது) அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை. (ஆனால்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி 1069, 3422

அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷா தொழுத போது, “இதஸ்ஸமாவுன் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தா செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இதற்காக) நான் ஸஜ்தா செய்திருக்கின்றேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தா செய்து கொண்டு தான் இருப்பேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ராஃபிவு,

நூல் : புகாரீ 766, 768, 1078

இதஸ்ஸமாவுன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஜ்தாச் செய்தோம்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 905, 906

மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில்

நஜ்மு (53வது அத்தியாயம்),

ஸாத் (38வது அத்தியாயம்),

இன்ஷிகாக் (84வது அத்தியாயம்),

அலக் (96வது அத்தியாயம்)

ஆகிய நான்கு அத்தியாயங்களை ஓதும் போது அதிலுள்ள ஸஜ்தா வசனங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.

இந்த ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தா செய்வது கட்டாயமில்லை. விரும்பினால் ஸஜ்தா செய்து கொள்ளலாம் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

’நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தா செய்யவில்லை.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி),

நூல் : புகாரீ 1072. 1073

ஒருவர் குர்ஆனில் உள்ள வசனங்களில் ஸஜ்தா செய்யுமாறு கட்டளையுள்ள எந்த வசனத்தை ஓதினாலும் விரும்பினால் அவ்வசனத்திற்காக ஸஜ்தா செய்து கொள்ளலாம்.

ஆதமின் மைந்தன் ஸஜ்தா (செய்யுமாறு கட்டளையுள்ள) வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தால் ஷைத்தான் அழுதவாறே அந்தோ எனக்கு வந்த நாசமே!

ஆதமின் மைந்தன் ஸஜ்தா செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் ஸஜ்தா செய்து விட்டான். அவனுக்கு செர்க்கம் கிடைக்கப் போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்கு) ஸஜ்தா செய்யுமாறு எனக்கு கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே எனக்கு நரகம் தான் என்று கூறியபடி விலகிச் செல்கிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்கள் : முஸ்லிம் (133), இப்னுமாஜா (1042), அஹ்மத் (9336)

ஸஜ்தா திலவாத் துஆ

தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். அப்போது ஓதுவதற்கென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பி ஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி.

பொருள் : என் முகத்தைப் படைத்து அதில் செவிப்புலனையும் பார்வைப்புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.

நூல்கள் : திர்மிதீ (529), நஸயீ (1117), அபூதாவூத் (1205), அஹ்மத் (22895)

இந்த சஜ்தாவிற்குப் பின்னால் சலாம் கொடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே சஜ்தா மட்டும் செய்து கொள்ள வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed