//குபைப் ரலியல்லாஹு அன்ஹு//

நபி (ஸல்) அவர்கள் (பத்துப் பேர் கொண்ட) உளவுப் படையொன்றை (ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் புதல்வர் ஆஸிமின் பாட்டனார் ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்களை அப்படையினருக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவுக்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள (‘ஹத்தா’ என்ற) இடத்தில் இருந்த போது ‘ஹுதைல்’ குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் என்றழைக்கப்பட்ட கிளையினருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அம்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் (கிளம்பி, உளவுப்படையினரைப் பிடிப்பதற்காக) அவர்களின் பாதச்சுவடுகளைப் பின் தொடர்ந்து வந்தனர்.

உளவுப்படையினர் இறங்கித் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். படையினர் மதீனாவிலிருந்து உணவாகக் கொண்டுவந்திருந்த பேரீச்சம் பழங்களின் கொட்டைகளை அங்கே கண்டனர். அப்போது “இது ‘யஸ்ரிப்’ (மதீனா நகரின்) பேரீச்சம் பழம்’’ என்று சொல்லிக் கொண்டனர். எனவே, உளவுப்படையினரின் பாதச்சுவடுகளைப் பின் தொடர்ந்து வந்து, இறுதியில் அவர்களை அடைந்தேவிட்டனர். ஆஸிம் (ரலி) அவர்களும், அவர்களுடைய நண்பர்களும் இதை அறிந்த போது (மலைப் பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர்.

அப்போது (துரத்தி வந்த) அந்தக் கிளையினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து, “நீங்கள் எங்களிடம் இறங்கிவந்து விட்டால், உங்களில் யாரையும் நாங்கள் கொலை செய்ய மாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும், வாக்குறுதியும் தருகிறோம்’’ என்று கூறினர். அப்போது ஆஸிம் பின் சாபித் (ரலி) அவர்கள், “நான் ஓர் இறை மறுப்பாளனின் (வாக்குறுதியை நம்பி அவனது) பாதுகாப்பில் இறங்கிச் செல்ல மாட்டேன். இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்து விடு’’ என்று கூறினார்கள். அப்போது அக்கிளையினர் உளவுப்படையினருடன் சண்டையிட்டு ஆஸிம் (ரலி) அவர்கள் உட்பட ஏழுபேரை அம்பெய்து கொன்றுவிட்டனர்.

இறுதியில் குபைப், ஸைத் (ரலி), மற்றொருவர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இம்மூவருக்கும் உறுதிமொழியும், வாக்குறுதியும் (எதிரிகள்) அளித்தனர். அவர்களது உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின் பேரில் இறங்கி வந்தனர். அவர்கள் (மூவரும்) தங்கள் கையில் கிடைத்தவுடன் (எதிரிகள்) தங்களது அம்பின் நாணை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், “இது முதலாவது நம்பிக்கைத் துரோகம்.’’ என்று கூறி, அவர்களுடன் வர மறுத்துவிட்டார், எனவே, அவரை (அடித்து)த் துன்புறுத்தி தம்முடன் வரும்படி நிர்பந்தித்தனர். ஆனால், அவர் உடன்படவில்லை. எனவே, அவரை அவர்கள் கொலை செய்து விட்டனர்.

பிறகு, குபைப் (ரலி) அவர்களையும், ஸைத் பின் தஸினா (ரலி) அவர்களையும் கொண்டு சென்று மக்காவில் விலைக்கு விற்று விட்டனர். ஹாரிஸ் பின் ஆமிர் பின் நவ்ஃபல் என்பவருடைய மக்கள், குபைப் (ரலி) அவர்களை (பழிதீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக் கொண்டனர். (ஏனெனில்,) குபைப் (ரலி) அவர்கள் ஹாரிஸ் பின் ஆமிரை பத்ருப் போரின் போது கொன்றிருந்தார்.

ஹாரிஸின் மக்களிடத்தில் குபைப் (ரலி) அவர்கள் (புனித மாதங்கள் முடிந்து) அவரைக் கொல்ல, அவர்கள் ஒன்று திரளும் (நாள் வரும்) வரையில் கைதியாக இருந்து வந்தார். (கொல்லப்படும் நாள் நெருங்கிய போது தன்னுடைய மறைவான உறுப்புகளிலிருந்த முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின் மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப் (ரலி) அவர்கள் இரவலாகக் கேட்டார். அவளும் அவருக்கு இரவலாகத் தந்தாள்.

(அதற்குப் பின் நடந்ததை அப் பெண்மணியே விளக்கிக்) கூறுகிறார்கள்:

நான் என்னுடைய சிறிய மகனைக் கவனிக்காமல் இருந்துவிடவே, அவன் (விளையாடிக் கொண்டே) தவழ்ந்து குபைப் அவர்களிடம் வந்து சேர்ந்தான். அவனை குபைப் அவர்கள் தமது மடியில் வைத்துக் கொண்டார்கள். (இந்நிலையில்) அவரை நான் பார்த்த போது பலமாக அதிர்ந்தேன். இதை அவர் புரிந்து கொண்டார். அவரது கையில் கத்தி இருந்தது. அப்போது அவர், “இவனை நான் கொன்று விடுவேன் என்று அஞ்சுகிறாயா? அல்லாஹ்வின் நாட்டப்படி நான் அப்படிச் செய்பவன் அல்லன்’’ என்று கூறினார்.

குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒரு நாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்து) சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்.

(பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து) ‘‘அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு’’ என்று அந்தப் பெண் கூறிவந்தார். (அவரைக் கொல்வதற்காக – மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே அவரை அவர்கள் கொண்டு வந்த போது, “இரண்டு ரக்அத்துகள் நான் தொழுது கொள்ள என்னை விடுங்கள்’’ என்று குபைப் கேட்டார். (அவர்களும் அனுமதிக்க, குபைப் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்.)

பிறகு, அவர்களின் பக்கம் திரும்பி, “நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கி யிருப்பேன்’’ என்று கூறினார். அவர் தான் (இறைவழியில்) கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் ஆவார்.

பிறகு “இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக் (கொண்டு, தனித்தனியாக இவர்களைக் கவனித்துக்) கொள்வாயாக!’’ என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு, “நான் முஸ்லிமாகக் கொல்லப்படும் போது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்தமாட்டேன். எந்த இடத்தில் நான் இறந்தாலும் இறைவனுக்காகவே நான் கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும் போது, அவன் நாடினால் எனது துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது தன் அருள்வளத்தைப் பொழிவான்’’ என்று (கவிபாடிக்) கூறினார்கள்.

பிறகு, உக்பா பின் ஹாரிஸ் என்பவன் குபைப் (ரலி) அவர்களிடம் வந்து, அவர்களைக் கொன்றுவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி-4086

சத்தியப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் குபைப் (ரலி) அவர்களை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக!

இதுவே குபைப் (ரலி) அவர்களின் தியாகத்திற்கும் ஈமானிய உறுதிக்கும் ஆகச் சிறந்த எடுத்துக் காட்டாக இருக்கும் போது. இதைச் சொல்லி குபைப் (ரலி) அவர்களை சமுதாயத்திற்கு நினைவுபடுத்தலாமே! அதை விட்டு ‘ஷுஹதாக்களின் தலைவர் என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்’ என இல்லாததை, நபி சொல்லாததை ஏன் நபியின் பெயரால் அள்ளிவிட வேண்டும்?

குபைப் (ரலி) யை உயிர்த்தியாகிகளின் தலைவர் என்ற அடைமொழியைக் கொண்டு நபிகள் நாயகம் அழைத்ததாக எந்த ஆதாரப்பூர்வமான குறிப்பும் இல்லை. நபிகளார் இவ்வாறு அழைத்ததற்கு ஹதீஸ் ஆதாரம் எதுவுமில்லை என்றால் அது பொய் என்று தானே அர்த்தம். ஹிதாயா நூலில் அது தான் பக்கத்திற்குப் பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed