கணவனைப் பிடிக்காத பெண்கள் அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டுமா?

சொல்ல வேண்டியதில்லை.

தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்ற கருத்தில் சில ஹதீஸ் உள்ளது.

ஹதீஸ் திர்மிதீ 1108 மற்றும் அஹ்மத் 21345 ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஸவ்பானிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவர் அறிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது. அவரது பெயரோ நம்பகத்தன்மையோ குறிப்பிடப்படவில்லை. யாரென்று தெரியாதவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்பது ஹதீஸ் கலை அறிஞர்களின் ஒருமித்த முடிவு.

இதே கருத்தில் இடம் பெற்றுள்ள திர்மிதீ 1107 ல் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ்லின் அறிவிப்பாளர்களில் மூன்று அறிவிப்பாளர்கள் பலவீனர்களாக உள்ளனர். திர்மிதீ இமாம் அவர்களும் இது பலவீனமான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இதே கருத்தில் இடம் பெற்றுள்ள நஸயீ 3407, அஹ்மத் 8990 ஆகிய ஹதீஸ்களும் பலவீனமானவையாகும். இந்த ஹதீஸை அபூஹுரைராவிடமிருந்து அறிவிக்கும் ஹஸன் என்பார் அபூஹுரைராவிடம் இருந்து எதையும் செவியுற்றதில்லை.

இந்தக் கருத்தில் பல்வேறு பலவீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருந்தாலும் அஹ்மதில் 21404வது ஹதீஸ் மட்டும் சரியான அறிவிப்பாளர் தொடருடன் இடம் பெற்றுள்ளது.

தகுந்த காரணமின்றி விவாகரத்துக் கோரிய பெண்ணுக்கு சொர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

குல்உ சம்பந்தமாக காரணமே இல்லாமல் பெண் விவாகரத்து கோரலாம் என்று கூறவில்லை. கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்று தான் கூறி வருகிறோம். காரணம் சொல்ல வேண்டியதில்லை என்பதற்கும், காரணம் இல்லாமல் பெண் விவாகரத்து கோரலாம் என்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

தகுந்த காரணமின்றி ஒரு பெண் விவாகரத்து கோரினால் அல்லாஹ்வின் பார்வையில் அவள் பாவியாகி விடுகின்றாள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது.

ஆனால் கணவனைப் பிடிக்காததற்கான காரணத்தை ஜமாஅத் தலைவரிடம் சொல்லித் தான் விவாகரத்து கோர வேண்டும் என்று கூறுவதற்கு இந்த ஹதீஸில் ஆதாரம் இல்லை.

காரணத்தைச் சொல்லத் தேவை இல்லை என்று நாம் குறிப்பிட்டதற்கு இந்த ஹதீஸ் முரணாக இல்லை.

ஒரு பெண் தன் கணவரை விட்டுப் பிரிவதற்காக விவாகரத்து கோருகிறாள் என்றால் அதற்குக் காரணம் இருக்கவும் செய்யலாம், இல்லாமலும் இருக்கலாம். தகுந்த காரணத்துடன் விவாகரத்து கோரியிருந்தால் அவள் மீது குற்றமில்லை. காரணம் இல்லாமல் விவாகரத்து கோரியிருந்தால் அவள் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாகி விடுகின்றாள்.

அந்தக் காரணத்தை அவள் சொல்லித் தான் விவாகரத்து கோர வேண்டும் என்ற நிபந்தனை இந்த ஹதீஸிலோ அல்லது வேறு ஹதீஸ்களிலோ காணப்படவில்லை.

தகுந்த காரணமின்றி விவாகரத்து கோரினால் அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கக் கூடாது’

என்று சொல்லாமல் ‘சொர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது’என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தே, அவள் அந்தக் காரணத்தை வெளியில் சொல்லத் தேவையில்லை என்பதை விளங்கலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed