ஒப்பந்தங்களை நிறைவேற்றுவோம்

நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்!

அல்குர்ஆன் 5:1

இறைவனை நம்பியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்பந்தங்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றான்.
தமது அமானிதங்களையும், உடன் படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள்.

அல்குர்ஆன் 23:8

அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள். உடன்படிக்கையை முறிக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 13:20

அமானிதங்களை கண்டிப்பாகப் பேணி நடக்க வேண்டும் என்றும், உடன்படிக்கையை முறிக்கக் கூடாது என்றும் இறைவன் அறிவுரை பகர்கின்றான்.
மேலும் இறைவன் கூறும் போது;

நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்கள் மீது அல்லாஹ்வைப் பொறுப்பாளனாக்கி, சத்தியங்களை உறுதிப்படுத்திய பின் அதை முறித்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

அல்குர்ஆன் 16:91

படைத்த இறைவனைப் பொறுப்பாளனாக முன்னிறுத்தி நீங்கள் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்றும், நம்ப வைத்து ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய பிறகு அதை முறிக்கக் கூடாது என்றும் ஆழமான கருத்தை இறைவன் பதிய வைக்கின்றான்.
அனாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! வாக்குறுதி விசாரிக்கப்படும்.

அல்குர்ஆன் 17:34

தொழுகையை நிலைநாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

அல்குர்ஆன் 2:177

ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதி என்பது அனைத்து மனிதர்களும் தங்களின் வாழ்நாளில் சந்திக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம். அதிலும் குறிப்பாக நபிகளார் காலத்தில் ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தில் வாழ்ந்த நல்லவர்கள், கெட்டவர்கள் குறித்தும், அவர்களின் குணநலன்கள் குறித்தும் திருக்குர்ஆன் தெள்ளத் தெளிவாக வித்தியாசப்படுத்தி காட்டுகின்றது.

“நீர் ஒரு (பொற்)குவியலையே நம்பி ஒப்படைத்தாலும் உம்மிடம் திருப்பிக் கொடுப்போரும் வேதமுடையோரில் உள்ளனர். நீர் ஒரு தங்க நாணயத்தை நம்பி ஒப்படைத்தாலும், அவர்களிடம் விடாப்பிடியாய் நின்றாலே தவிர உம்மிடம் திருப்பிக் கொடுக்காதோரும் அவர்களில் உள்ளனர். “பாமரர்கள் விஷயத்தில் நம்மைக் குற்றம் பிடிக்க எந்த வழியுமில்லை” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 3:75

இறையச்சமுடையோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 3:76,77

தமது வாக்குறுதியையும், உறுதிமொழியையும் முறையாகப் பேணுபவர் தான் இறைவனுக்கு அஞ்சி தன்னுடைய வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றார் என்பதாகும்.

ஒப்பந்தங்களையும், வாக்குறுதிகளையும், சத்தியங்களையும் யார் முறையாகப் பேணி நடக்கவில்லையோ, அத்தகையோரை இறைவன் பார்க்க மாட்டான்; அவர்களிடத்தில் பேச மாட்டான்; அவர்களைப் பரிசுத்தப்படுத்த மாட்டான் என்று கண்டன வார்த்தைகளை பதிய வைத்து எச்சரிக்கை விடுக்கின்றான்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed