உளுவின் காரணமாக ஒளிரும் முகங்கள்

ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், ‘‘ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 421

ஆதம் நபி முதல் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை அனைவரது சமுதாயங்களும் நிறைந்து நிற்கின்ற மறுமை நாளில், நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தை அடையாளங்காண அரியதொரு அடையாளமாக அமைவது நாம் செய்கின்ற உளூ தான்.
இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது,

தொழுகைக்காக உளூ செய்து கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தமது கையை அக்குள் வரை நீட்டிக் கழுவினார்கள்.

நான், ‘‘அபூஹுரைரா அவர்களே! இது என்ன உளூ?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஃபர்ரூகின் மக்களே! (பாமரர்களான) நீங்கள் இங்குதான் இருந்தீர்களா? நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள் என்று நான் அறிந்திருந்தால் இவ்வாறு உளூ செய்திருக்கமாட்டேன். என் உற்ற தோழர் (ஸல்) அவர்கள், ‘‘இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும்’’ என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹாஸிம்
நூல்: முஸ்லிம் 420

இந்த ஹதீஸின் மூலம் உளூவின் சிறப்பையும் அது மறுமையில் நமக்கு அடையாளமாகத் திகழ்வதையும் விளங்கிக் கொள்ளலாம். அதனால் அந்த உளூவை நாம் நிறைவாகச் செய்யவேண்டும்.

நாளை மறுமையில் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தினர் ‘குர்ரன் முஹஜ்ஜிலீன்’ அதாவது முகம் கைகால்கள் ஒளிமயமானவர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்பதைப் பின்வரும் புகாரி ஹதீஸ் விவரிக்கின்றது.

பள்ளிவாசலின் மேல்புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) ‘நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில், உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்’ என்றார்கள்

அறிவிப்பவர்: நுஐம் அல் முஜ்மிர்
நூல்: புகாரி 136

மறுமை நாளில் ஒளிமயமானவர்களாக வருவார்கள் என்று அல்லாஹ் கூறும் வசனங்களுக்கு இந்த ஹதீஸ் விளக்கமாகவும் உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அமைகின்றது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed