உருவப்படத்திற்கு அனுமதி உண்டா

இஸ்லாத்தில் உருவம் வரைவது ஹராம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்கு படம் வரைவதில் ஆர்வம் அதிகம். சிலர் முகத்தை புகைப்படத்தை பார்த்து வரைந்திருக்கிறேன். நான் வரயும் படங்கள் அனைத்தும் என் பொழுது போக்கிற்காக மட்டும் தான் வரைந்திருக்கிறேன். எவரேனும் நான் வரைந்த உருவப் படத்தைக் கேட்டால் அதை நான் அன்பளிப்பாக கொடுக்கலாமா? இது ஹராமா? இஸ்லாத்தில் உருவம் வரைவது எந்த அளவில் தடுக்கப் பட்டிருக்கிறது.

உருவச்சிலைகள், உருவப்படங்கள், புகைப்படங்கள், நிழற்படங்கள், எலக்ட்ரான் கதிர் அலைகளால் தெரியும் படங்கள் என பல்வேறு வகைகள் உள்ளன. இவை குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

“எந்த வீட்டில் உருவச்சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் நுழைய மாட்டார்கள்’ என்பது நபிமொழி. அபுதல்ஹா(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி (3225), முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

உருவச் சிலைகள் என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் “திம்ஸால்’ “தமாஸீல்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸில் உருவச் சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் வர மாட்டார்கள் என்று கடுமையான வார்த்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளதால் உருவச்சிலைகளுக்கு அறவே அனுமதி இல்லை என்று தெளிவாக உணரலாம்.

இந்தத் தடை எல்லா உருவச் சிலைகளுக்கும் பொதுவானதா? அல்லது இதில் விதி விலக்கு ஏதும் உள்ளதா? என்று பார்ப்போம்.

“நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் போது பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன். என்னுடன் விளையாடுவதற்கு சில தோழிகளும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என்னுடன் விளையாட) அவர்களை திருப்பி அனுப்புவார்கள். அதன் பின் அவர்கள் என்னோடு விளையாடுவார்கள்” என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.

இது புகாரி (6130), முஸ்லிம், அபூதாவூத் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸிலிருந்து “பனாத்’ (பொம்மைகள்) வைத்து விளையாட அனுமதி உள்ளது என்று உணரப்படுகின்றது. ஆயிஷா (ரலி) அவர்கள் “உயிருள்ளவைகளின் பொம்கைளையே வைத்து விளையாடி இருக்கிறார்கள்” என்பதை வேறு ஒரு செய்தி தெளிவாக அறிவிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக்கோ, அல்லது ஹுனைனோ இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தனர். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைக்குப் போடப்பட்டிருந்த திரை விலக்கியது. அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஆயிஷாவே என்ன இது?” என்றார்கள். “என் பொம்மைகள்” என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றையும் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “குதிரை” என்று ஆயிஷா(ரலி) பதில் கூறினார்கள். குதிரையின் மேல் என்ன? என்று கேட்டார்கள். “இறக்கைகள்” என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்க, “ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?” என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் அபூதாவூதில் (4283) இது இடம் பெற்றுள்ளது.

உயிருள்ள குதிரையின் உருவச் சிலையைக் கண்ட பின்னும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டிக்காதது மட்டுமல்ல; தமது சிரிப்பின் மூலம் அதற்கு அங்கீகாரமும் அளிக்கிறார்கள். இதன் மூலம் உயிரற்றவைகள் மட்டுமல்ல; உயிருள்ளவைகளின் பொம்மைகளைக் கூட சிறுவர்கள் விளையாடலாம். அதை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது தெளிவாகின்றது. உருவச்சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது, சிறுவர்களின் விளையாட்டுக்காக இல்லாமல் ஏனைய நோக்கங்களுக்காக உள்ள உருவச்சிலைகளுக்கே என்று உணரலாம்.

சிறுவர்கள் கற்றுக் கொள்வதற்காக யானை, சிங்கம் போன்ற விலங்குகளை வரைந்து கற்றுக் கொடுப்பது, இது அல்லாத அறிவைப் பெருக்குவதற்குத் தேவையான உருவப்படங்களை சிறுவர்களுக்குக் கொடுப்பதும் வீட்டில் வைத்திருப்பதும் குற்றமாகாது என்பதையும் இதில் இருந்து அறியலாம்.

பயனில்லாமல் விளையாட்டுப் பொருளாகவே பொம்மைகளை வைத்துக் கொள்ளலாம் என்றால் அறிவை வளர்ப்பதற்காக உருவப்படங்களை வைத்து சொல்லிக் கொடுக்கலாம் என்பதை அறியலாம்.

உயிரற்ற பொருட்களாகிய மரம், செடி, கப்பல், வீடு, கார் போன்ற உருவங்களுக்குத் தடை ஏதுமில்லை. இவை உருவச் சிலையாக இருந்தாலும் உருவப்படங்களாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

“நான் ஓவியங்கள் வரைகிறேன். அது பற்றி எனக்குத் தீர்ப்பளியுங்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர் கேட்டார். “எல்லா ஓவியர்களும் நரகில் தான். அவன் வரைந்த ஓவியங்களுக்கு உயிரளிக்கப்பட்டு அவை அவனை நரகில் வேதனைப்படுத்தும். நீ அவசியம் செய்தாக வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளைச் செய்து கொள்!” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

இது புகாரி (2225), முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

உயிரற்ற பொருட்களைச் செய்து கொள்ள ஒரு தடையுமில்லை என்பதை இந்த ஹதீஸ் திட்டவட்டமாக அறிவித்து விடுகின்றது. ஆனால் இந்த அனுமதியிலும் விதிவிலக்கு இருக்கின்றது. உயிரற்றவைகளான ஒரு சில பொருட்களை வைத்துக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி மறுக்கிறார்கள்.

” நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் “சிலுவைகளைப் பொறித்த எந்தப் பொருளையும் அழிக்காமல் விட மாட்டார்கள்’ என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி,(5952) அபூதாவூத், நஸயீ, அஹ்மத் ஆகிய நூற்களில் இது இடம் பெற்றுள்ளது.”

ஏனைய மக்களால் புனிதப் பொருளாக கருதப்படும் பொருட்களின் உருவங்கள் உள்ளப் பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

முப்பரிமாணம் உள்ள உருவச் சிலைகளைப் பொருத்தவரை சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மைகள், வைத்துக் கொள்ள அனுமதி உள்ளது என்பதையும், பிறரால் புனிதமாகக் கருதப்படாத உயிரற்ற ஏனைய உருவச்சிலைகளையும் வைத்துக் கொள்ளலாம் என்பதையும் இதன் மூலம் அறிகிறோம். இவற்றைத் தவிர எல்லா உருவச்சிலைகளையும் இஸ்லாம் முற்றாக தடை செய்கிறது.

உருவப்படங்கள்

உருவப் படங்கள் வைத்திருப்பதை இஸ்லாம் தடை செய்கின்றது.

எந்த வீட்டில் உருவப்படங்கள் உள்ளனவோ அந்த வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது நபிமொழி.

அபூதல்ஹா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி (3227), முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்த போது உருவங்கள் உள்ள திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதைக் கண்டதும் அவர்களின் முகம் மாற்றமடைந்தது. அதைக் கிழித்து எறிந்து விட்டு “ஆயிஷாவே! அல்லாஹ்வின் படைப்பைப் போல் படைக்க முற்படுபவர்களே கியாமத் நாளில் கடுமையான தண்டனைக்குரியவர்கள்” என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, (6109) முஸ்லிம், முஅத்தா, நஸயீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

உருவப்படங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டதா? அதில் ஏதேனும் விதிவிலக்கு உண்டா? என்பதை இனி காண்போம்.

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்த போது உருவப்படம் வரையப்பட்ட திரைச்சீலைகளைக் கண்டதும். அதை அகற்றினார்கள். நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் அவர்கள் சாய்ந்து கொள்பவர்களாக இருந்தனர்” என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.

புகாரி (2479), முஸ்லிம் அஹ்மத் ஆகிய நூற்களில் இது இடம் பெற்றுள்ளது.

நான் இதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் உருவப்படங்கள் இருக்கும் நிலையிலேயே அதில் அவர்கள் சாய்ந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிக்கும் மற்றொரு ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.

சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச்சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான். உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும், உருவப்படங்கள் உள்ள திரைச்சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள்” என்று ஜிப்ரீல் (அலை) என்னிடம் கூறினார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத் (3627), திர்மிதீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச்சீலை இருந்ததாகவும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிழித்ததும், அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். இது முஸ்லிமில் (3935) இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ்களைக் கவனமாகப் பார்க்கும் போது, உருவப் படங்களில் அனுமதிக்கப்பட்டவை எவை? தடுக்கப்பட்டவை எவை? என்பதை எவரும் அறிய முடியும். மதிப்பு மிக்கவையாக கருதப்படும் உருவப்படங்களே தடுக்கப்படுகின்றன. “மதிப்பில்லாமல் மிதிபடும் தலையணையாக மாற்றுமாறு‘ ஜிப்ரீல் (அலை) கூறிய வார்த்தை இதைத் தெளிவாக விளக்கும். எந்த உருவம் திரைச்சீலையாக தொங்கிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டதோ அதே உருவம் தலையணையாகத் தரையில் போடக் கூடியதாக ஆகும் போது நபிகள் நாயகம் பி(ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை. மாறாக அதை அவர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தத் திரைச்சீலையை இரண்டாகக் கிழித்த போது உருவமும் பாதி பாதியாக சிதறுண்டு போயிருக்கலாம். அதனால் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று சிலருக்குத் தோன்றக் கூடும். அது சரியான அனுமானம் அல்ல. ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்கள்

“அதில் உருவம் இருக்கும் நிலையிலேயே அதில் சாய்ந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” என்கிறார்கள்.

உருவம் சிதைந்து அதைப் பயன்படுத்தினார்கள் என்றால் அதை உருவம் என்று சொல்லும் அளவுக்கு விபரம் அறியாதவர்களாக அறிவுச் சுடர் அன்னை ஆயிஷா (ரலி) இருக்கவில்லை. சின்னஞ்சிறு வித்தியாசத்தையும் நுணுக்கமாகக் கவனிக்கும் அன்னை அவர்கள் உருவம் சிதைந்து போயிருந்தால் அதை உருவம் என்று குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.

மேலும் சம்மந்தப்பட்ட ஹதீஸில் உருவச் சிலையின் தலையை அகற்றுமாறு கூறிய ஜிப்ரீல் (அலை) அவர்கள், உருவப்படங்கள் உள்ள சீலையை உருவம் தெரியாதவாறு நீள வடிவில் பாதியாகக் கிழிக்குமாறு கூறவில்லை. உருவம் தெரியாத அளவுக்கு மாற்றினால் தான் தலையணையாகப் பயன்படுத்தலாம் என்றிருந்தால் “மதிப்பில்லாமல் மிதிபடும் வகையில் என்று கூறியிருக்கத் தேவையில்லை. இன்னும் சொல்வதென்றால் தலையணையாக ஆக்குமாறு கூட அவர்கள் கூறத் தேவையில்லை. உருவம் தெரியாத வகையில் கிழிக்கப்பட்டு விட்டால் அதைத் திரைச்சீலையாகவே மீண்டும் பயன்படுத்தலாமே!”

ஆக மதிப்பற்ற விதத்தில் பொறிக்கப்பட்டுள்ள படங்களைப் பயன்படுத்தத் தடை ஏதும் இல்லை என்பதே சரியாகும்.

தொங்க விடப்படும் உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலைகள், பிரேம் செய்து மாட்டப்படும் உருவப் படங்கள், ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கும் போட்டோக்கள், பெட்டியில் பூட்டி வைத்து பாதுகாக்கும் உருவப் படங்கள் இவயெல்லாம் தடுக்கப்படுகின்றன. அதைப் பற்றி மதிப்பிருக்கின்ற காரணத்தினால் தான் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். உயர்ந்த இடத்தில் வைத்துப் பேணுகிறார்கள். இது போன்ற வழிகளில் பயன்படுத்த இஸ்லாம் தடுக்கின்றது.

செய்தித்தாள்களில் காணப்படும் உருவப்படங்கள், பொட்டலம் கட்டிக் கொடுக்கப் பயன்படும் உருவப்படங்கள் பொறித்த காகிதங்கள், பொருட்களைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பெட்டிகளில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கு (உதாரணம்: தீப்பெட்டி) எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இவைகளை வைத்திருக்கத் தடையும் இல்லை. ஒரு செய்திப் பத்திரிகை நம் வீட்டில் இருந்தால் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பதில்லை.

அது போல் சாட்சியங்களாகப் பயன்படக் கூடிய வகையிலும் படங்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு ஊரில் ஒரு சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அம்பலப்படுத்திட புகைப்படங்கள் சிறந்த சாட்சியமாகப் பயன்படும். சிலரது சந்திப்புகளை நிரூபிக்கும் அவசியம் ஏற்படும் என்றால் அப்போதும் புகைப்படங்களைத் தடுக்க முடியாது.

இது தவிர சிறிய அளவிலான உருவப்படங்களுக்கும் அனுமதி இருக்கிறது.

புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள 5958 வது ஹதீஸில் இருந்து இதை அறியலாம்.

5958 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள், பின்னர் நோய்வாய்ப்பட்ட போது நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்களுடைய வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. நான் (உடனிருந்த) நபி (ஸல்) அவர்களின் துணைவியரான மைமூனா (ரலி) அவர்களுடைய வளர்ப்பு மகன் உபைதுல்லாஹ் பின் அஸ்வத் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம் , உருவப் படங்களைப் பற்றி முன்பு ஒரு நாள் ஸைத் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா? என்று கேட்டேன். உடனே உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், துணியில் வரையப்பட்டதைத் தவிர’ என்று அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார்கள்.135

இந்த ஹதீஸ் அபூதல்ஹா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

மேலும் புஹாரி 3226 ஹதீஸையும் பார்க்க

மேற்கண்ட ஹதீஸில் ரஹ்மத் டர்ஸ்ட் தமிழாக்கத்தில் துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் படத்)தைத் தவிர’ என்று மொழிபெயர்த்துள்ளனர். மொழி பெயர்ப்பு சரியானது என்றாலும் அடைப்புக்குறிக்குள் அவர்கள் போட்டுள்ள சொற்கள் மொழி பெயர்த்தவர்கள் சுயமாக சேர்த்ததாகும். மூலத்தில் இல்லை. அதை நீக்கி விட்டுத்தான் இந்த ஹதீஸின் கருத்தை சிந்திக்க வேண்டும்.

ஆடைகளில் அழகுக்காக சிறு சிறு உருவங்களை பதிப்பதை நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்த்தால் தான் அந்த உருவம் இன்னது எனத் தெரியும். தூரத்தில் இருந்து பார்த்தால் அது ஒரு வேலைப்பாடாகத் தான் தெரியும். இது தான் அரபு மொழியில் ர(க்)கம் என்று கூறப்பட்டும். அந்தச் சொல் தான் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தூரத்தில் இருந்து பார்த்தாலும் அது என்ன உருவம் என்பது தெரியுமானால் அந்த உருவம் முக்கியப்படுத்தப்பட்டு பொரிக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. உருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சிறிது சிறிதாக வேலைப்பாடு என்ற அடிப்படையில் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட உருவமாக இருந்தால் அதற்குத் தடை இல்லை என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

எனவே உருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வேறு காரணத்துக்காக சிறிய அளவில் வரையப்பட்ட உருவங்களைப் பயன்படுத்துவது தவறல்ல என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

மேலும் நஸாயி, திர்மிதி ஆகிய நூல்களில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸையும் காண்க

அபூ தல்ஹா ரலி அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவரை நான் நோய் விசரிக்கச் சென்றேன். அவருடன் ஸஹ்ல் பின் ஹுனைஃப் ரலி அவர்களும் இருந்தார்கள். அபூதல்ஹா அவர்கள் ஒரு மனிதரை அழைத்து தனக்குக் கீழே உள்ள விரிப்பை நீக்குமாறு கூறினார்கள். இதைக் கண்ட ஸஹ்ல் ரலி அவர்கள் ஏன் இதை நீக்குகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அபூதல்ஹா ரலி அவர்கள் அதில் உருவப்படங்கள் உள்ளன; உருவப்படங்கள் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது தான் உமக்குத் தெரியுமே என்று கூறினார்கள். அத்ற்கு ஸஹ்ல் ரலி அவர்கள் ஆடையில் வேலைப்பாடு செய்யப்பட்ட உருவங்களைத் தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லையா என்று அபூதல்ஹாவிடம் கேட்டார்கள். அதற்கு அபூ தல்ஹா அவர்கள் ஆம் ஆனாலும் என் மன திருப்திக்காக (அதாவது பேணுதலுக்காக) அகற்றச் சொன்னேன் என்று கூறினார்கள்.

மேற்கண்ட விதிவிலக்கை இந்த ஹதீஸும் உறுதிப்படுத்துகிறது.

இது போன்ற விதிவிலக்கு இல்லாமல் உருவப்படங்கள் வரைய அனுமதி இல்லை.

எனவே பொழுதுபோக்கிற்காக உயிருள்ளவர்களின் உருவப்படங்களை நீங்கள் வரைவதும் இந்த அடிப்படையில் தடை செய்யப்பட்டதாகும். உருவம் வரைபவர்கள் நரகில் தண்டிக்கப்படுவார்கள் என்பதால் இதை நீங்கள் கைவிட வேண்டும். அடுத்தவர்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்குவதும் கூடாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed