இறைவனை நேசித்து இறை நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்வோம் 

நம்மீது ஒருவர் அன்பு காட்டினால் அவர் மீது நமக்கு அன்பு ஏற்படத் தொடங்கி விடுகிறது. பெற்றெடுத்த தாய், குழந்தையின் மீது அதிக பாசத்தைப் பொழிவதால் குழந்தைக்குத் தாயின் மீது அதிக பாசம் ஏற்படுகிறது. இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்தாலும் அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நேசிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் போல் எவரும் நம்மீது அன்பு காட்ட இயலாது. இன்றைக்குத் தாயின் பாசம் தான் உயர்ந்த நேசமாக உலகத்தில் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

ஆனால் அல்லாஹ் அடியார்கள் மீது காட்டும் அன்பையும், ஒரு தாய் தன் குழந்தையின் மீது காட்டும் அன்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அல்லாஹ் அடியார்கள் மீது பொழியும் பாசத்தில் கடுகளவுக்குக் கூட தாய்ப்பாசம் நிகராகாது. சகல சக்திகளையும் பெற்று எல்லா வகையிலும் சிறந்து விளங்கும் இறைவன் அற்பமான மனிதர்களை மிகவும் நேசிக்கிறான் என்றால் அவனை நாம் நேசிக்காமல் இருக்கலாமா? பின்வரும் ஹதீஸ்கள் அல்லாஹ்வின் அன்பை விவரிக்கக் கூடியதாக இருக்கிறது.

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை கைதிகளில் (தன்) குழந்தையை அவள் கண்ட போது அதை வாரி எடுத்து தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், இந்தப் பெண், தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள் என்றார்கள். நாங்கள், இல்லை. எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பை விட அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்  : உமர் பின் கத்தாப் (ரலி),

நூல் : புகாரி (5999)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்விற்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன் மீது மற்றொன்று பாசம் கொள்கின்றன. பரிவு காட்டுகின்றன. அதன் மூலம் தான் விலங்கு கூட, தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் அடியார்களுக்கு அன்பு காட்டுவான்.

அறிவிப்பவர்  : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் (5312)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அல்லாஹ் அவருக்குச் செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கி விட்ட போது தன் மகன்களிடம், உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக நான் இருந்தேன்? என்று கேட்டார். அவர்கள், சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர், நான் நற்செயல் எதுவும் செய்யவில்லை. ஆகவே நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு என்னை பொடிபொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள் என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) இப்படிச் செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது? என்று கேட்டான். அவர் உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான்.

அறிவிப்பவர்  : அபூசயீத் (ரலி),

நூல் : புகாரி (3478)

அல்லாஹ்வின் கருணையை விவரிக்கும் செய்திகள் ஏராளமாக இருக்கின்றன. உதாரணத்திற்காகச் சிலவற்றை மாத்திரம் கூறியுள்ளோம். அதிகமான வணக்க வழிபாடுகள் துன்பம் வரும் போது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது, நன்மை ஏற்படும் போது அவனைப் புகழ்வது, நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் போன்ற நற்காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் அல்லாஹ்வின் நேசம் நம் மனதில் குடியேறத் தொடங்கிவிடும்.

எனவே நேசிப்பதற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்ற இறைவனை நேசித்து இறை நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்ளும் சிறப்பை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed