இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா?

புதிய ஆய்வு முடிவுகள்!

இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்து வந்தது.

இது குறித்து சில அமர்வுகள் கடந்த காலங்களில் கூட்டப்பட்டன. இது ஹலால் ஹராம் சம்மந்தப்பட்ட விஷயமாக உள்ளது. நமது முடிவு ஹலாலை ஹராமாக்கும் வகையிலும் இருக்கக் கூடாது. ஹராமை ஹலாலாக்கும் வகையிலும் இருக்கக் கூடாது என்பதால் ஆகஸ்ட் மாதம் இறுதி அமர்வில் இது குறித்த எல்லா சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் ஆதாரங்களைத் திரட்டி வருமாறு அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களின் ஆய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வரங்கில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளையும், கருத்துக்களையும் மக்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

இது குறித்து பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் பேசுகின்றன.

{فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِنْ كُنْتُمْ بِآيَاتِهِ مُؤْمِنِينَ } [الأنعام: 118]

நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்!

திருக்குர்ஆன் 6:118

{وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ وَإِنَّ كَثِيرًا لَيُضِلُّونَ بِأَهْوَائِهِمْ بِغَيْرِ عِلْمٍ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِالْمُعْتَدِينَ} [الأنعام: 119]

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.

திருக்குர்ஆன் 6:119

{وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ} [الأنعام: 121]

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.

அல்குர்ஆன் 6 : 121

ஒருவன் திருக்குர்ஆனை நம்புகிறானா? இல்லையா? என்பதற்கான அளவுகோலில் ஒன்று அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்பதாகும் என்ற கருத்தை 6:118 வசனம் கூறுகிறது. “நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள்” என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்த பின் அதை உண்ண மறுப்பது குர்ஆனை மறுப்பதாகும் என்று இவ்வசனம் கடுமையான விஷயமாக குறிப்பிடுகிறது.

6:119 வசனம் இன்னும் அழுத்தமாக இக்கருத்தை முன்வைக்கிறது. அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பின்னர் அதை உண்ண மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.

6:121 வசனம், அல்லாஹ்வின் பெயர் கூறப்படாமல் சாகடிக்கப்பட்டதை உண்ணக் கூடாது என்று தடை விதிக்கின்றது.

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டால் உண்ணலாம்; உண்ண வேண்டும்; உண்பதை தடுக்கப்பட்டதாக கருதக் கூடாது. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாவிட்டால் அதை உண்ணக் கூடாது என்று இம்மூன்று வசனங்களிலும் கூறப்படுகிறது.

அல்லாஹ்வின் பெயரைக் கூறுபவனுக்குரிய தகுதி என்ன?

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதைத் தான் உண்ண வேண்டும் என்பது தெளிவான சொற்களால் கூறப்பட்டு இருந்தாலும் இதில் ஒரு சந்தேகம் எழுகின்றது.

அல்லாஹ்வை நம்பும் சிலர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்களாக உள்ளனர். இவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததாக ஆகுமா? என்பதுதான் இந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகத்துக்கு அடிப்படையும் இருக்கிறது.

அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்கள் அல்லாஹ்வுக்காக எந்த வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ் ஏற்க மாட்டான். இணைகற்பித்தால் எல்லா நல்லறங்களும் அழிந்து விடும் என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது.

{إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا} [النساء: 48]

தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

{إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا} [النساء: 116]

தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.

திருக்குர்ஆன் 4:116

{إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ } [المائدة: 72]

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை”

திருக்குர்ஆன் 5:72

{ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ} [الأنعام: 88]

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

திருக்குர்ஆன் 6:88

{وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ} [الزمر: 65]

“நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65

{مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَنْ يَعْمُرُوا مَسَاجِدَ اللَّهِ شَاهِدِينَ عَلَى أَنْفُسِهِمْ بِالْكُفْرِ أُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ وَفِي النَّارِ هُمْ خَالِدُونَ} [التوبة: 17]

இணை கற்பிப்போர் தமது (இறை)மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:17

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காத நிலையில் செய்யும் காரியங்கள் தான் இறைவனால் ஏற்கப்படும் என்பதை இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இதனடிப்படையில் பார்க்கும் போது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தாலும் அதை எப்படி உண்ண முடியும்? என்ற சந்தேகம் சரியானதுதானா?

வணக்க வழிபாடுகளைப் பொருத்த வரை இந்தச் சந்தேகம் சரியானது என்றாலும் பிராணிகளை அறுக்கும் விஷயத்துக்கு இது பொருந்தாது என்பது தான் சரியானதாக தெரிகிறது.

மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களில் அல்லாஹ்வின் பெயரை முஸ்லிம்களாகிய நீங்கள் கூறி அறுத்ததை உண்ணுங்கள் எனக் கூறவில்லை. மாறாக அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள் என்று செயப்பாட்டு வினையாகக் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்; கூறுபவர் யார் என்பது முக்கியமில்லை என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.

இவ்வசனங்கள் மக்காவில் அருளப்பட்டவையாகும். முஸ்லிம்கள் மிக குறைவாக இருந்த அந்தக் காலத்தில் முஸ்லிம்களின் உறவினர்கள் இணைகற்பிப்பவர்களாக இருந்தனர். இணை கற்பிப்பவர்களைச் சார்ந்தும் இருந்தனர். அவர்கள் தரும் மாமிச உணவுகளை உண்ணக் கூடிய நிலையை அவர்கள் சந்தித்தனர்.

அவர்கள் சந்தித்த பிரச்சனைக்குத் தீர்வாகவே இவ்வசனங்கள் அருளப்பட்டன.

இணைகற்பித்தவர்கள் தரும் மாமிச உணவை உண்ணக் கூடாது என்பது அல்லாஹ்வின் நோக்கமாக இருந்தால் முஸ்லிம்கள் அறுத்ததை மட்டும் உண்ணுங்கள் என்றோ, நீங்கள் அறுத்ததை மட்டும் உண்ணுங்கள் என்றோ காஃபிர்கள் அறுத்ததை உண்ணாதீர்கள் என்றோ அல்லது இது போன்ற தெளிவான வார்த்தைகளால் அல்லாஹ் கட்டளையிட்டு இருப்பான்.

ஆனால் அவ்வாறு கூறாமல் அறுப்பவர் யார் என்பதை அலட்சியப்படுத்தும் வகையில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இணை கற்பித்துக் கொண்டு இருந்த அன்றைய மக்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியும் அறுத்து வந்தனர். அல்லாஹ்வின் பெயர் கூறாமலும் அறுத்து வந்தனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுத்தால் அதை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வின் பெயரைக் கூறி அவர்கள் அறுத்ததை உண்ணுங்கள் என்ற கருத்தைத் தரும் வகையில் மேற்கண்ட வசனங்கள் அமைந்துள்ளன.

மேற்கண்ட மூன்று வசனங்களும் முஸ்லிம்களுக்கு இருந்த ஒரு தயக்கத்தை நீக்கும் வகையில் அமைந்துள்ளன. நீங்கள் எப்படி உண்ணாமல் இருக்கலாம்? உண்ணாமலிருக்க உங்களுக்கு என்ன வந்தது? என்ற வாசகங்களில் இருந்து இதை அறியலாம்.

முஸ்லிம்களுக்கு எதில் தயக்கம் இருந்திருக்கும்?:

அல்லாஹ்வின் பெயரைக் கூறித்தான் முஸ்லிம்கள் அறுப்பார்கள். அதை உண்ணலாமா என்ற சந்தேகமோ, தயக்கமோ அன்றைய முஸ்லிம்களுக்கு இருந்திருக்க முடியாது.

எதில் அவர்களுக்குத் தயக்கமும், சந்தேகமும் இருந்திருக்கும்? இணைகற்பிப்பவர்கள் அறுத்து விட்டார்களே? அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் அவர்கள் இணை கற்பித்து வருகிறார்களே? அதை எப்படி உண்பது என்ற தயக்கம் தான் இருந்திருக்கும்.

இந்தத் தயக்கத்தைப் போக்கும் வகையில் தான் இவ்வசனங்களின் வாசக அமைப்பு அமைந்துள்ளது.

மக்காவில் வாழ்ந்த இணை கற்பிப்பவர்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி எப்படி அறுத்திருப்பார்கள்? அவர்கள் தங்களின் தெய்வங்கள் பெயரைச் சொல்லித்தானே அறுத்திருப்பார்கள்? என்ற சந்தேகம் எழலாம். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறாமலும் அறுப்பார்கள். அல்லாஹ்வின் பெயர் கூறியும் அறுப்பார்கள் என்பதை திருக்குர்ஆனிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

{ وَأَنْعَامٌ حُرِّمَتْ ظُهُورُهَا وَأَنْعَامٌ لَا يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا افْتِرَاءً عَلَيْهِ سَيَجْزِيهِمْ بِمَا كَانُوا يَفْتَرُونَ} [الأنعام: 138]

சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.

திருக்குர்ஆன் 6 : 138

”சில கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம்” என்ற வாசகத்தில் இருந்தே ”மற்ற சில கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவார்கள்” என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

சில கால்நடைகளை அறுக்கும் போது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறாமல் இருப்பதை அல்லாஹ் இடித்துரைக்கிறான். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அது வரவேற்கத்தக்கது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

இதே அடிப்படையை பின்வரும் நபிமொழியும் போதிக்கின்றது.

سنن النسائي (7/ 226(

4403 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:«مَا أَنْهَرَ الدَّمَ، وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ، إِلَّا بِسِنٍّ أَوْ ظُفُرٍ»

இரத்தத்தை ஓடச் செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர.

அறிவிப்பவர் : ராஃபிவு பின் கதீஜ் (ரலி)

நூல் : நஸாயீ (4403) புகாரி (2488)

மேற்கண்ட நபிமொழியிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும் என்பதுதான் கட்டளையாகக் கூறப்பட்டுள்ளதே தவிர அதனைக் கூறுபவர் யார்? அவருடைய கொள்கை என்ன? என்பதைக் கவனிப்பதற்கு அல்லாஹ் கட்டளையிடவில்லை.

எனவே அல்லாஹ்வை நம்பிய நிலையில் அல்லாஹ்விற்கு இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்பவர் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் நாம் தாராளமாகச் சாப்பிடலாம் என்ற முடிவிற்கே நாம் வரமுடியும். இதுதான் இறைவசனத்தின் அடிப்படையில் சரியான முடிவாகும்.

அபூஜஹ்ல் போன்றவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்திருந்தால் அதையே சாப்பிடலாம் என்றால் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள், தர்காவழிபாடு செய்பவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் அதையும் உண்ணலாம் என்பது தான் சரியான கருத்தாக தெரிகிறது.

நமது நாட்டிலும் முஸ்லிம் அல்லாத மக்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் உண்ணலாமா என்ற சந்தேகத்தையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இணை கற்பித்த மக்காவாசிகளுக்கும், நமது நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

மக்காவில் வசித்த இணைகற்பித்தவர்கள் அல்லாஹ் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பினார்கள். அவன் தான் படைத்தவன் என்றும், எல்லா அதிகாரமும் அவனுக்கே உரியது என்றும் நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்பதற்காகவே குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம்.

{قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ } [يونس: 31]

‘வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா’ என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

{قُلْ لِمَنِ الْأَرْضُ وَمَنْ فِيهَا إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (84) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ} [المؤمنون: 84، 85]

‘பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கே’ என்று அவர்கள் கூறுவார்கள். ‘சிந்திக்க மாட்டீர்களா?’ என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:84,85

{قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ (86) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَتَّقُونَ } [المؤمنون: 86، 87]

‘ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?’ எனக் கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘அஞ்ச மாட்டீர்களா;?’ என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:86,87

{قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (88) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّى تُسْحَرُونَ} [المؤمنون: 88، 89]

‘பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். ‘எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’ என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:88,89

{وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ} [العنكبوت: 61]

‘வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று கூறுவார்கள். அப்படியாயின் ‘எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?’

திருக்குர்ஆன் 29:61

{وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ} [العنكبوت: 63]

‘வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். ‘அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 29:63

https://www.onlinetntj.com/articles/inaivaipalarkal-arutha-piranikalai-sapidalama/2628/

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed