அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்கள்

அடுத்து குர்ஆனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அரபு எழுத்துக்களில் ஏற்பட்ட மாறுதல்களாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. 14 நூற்றாண்டுகள் கடக்கும்போது எந்த ஒரு மொழியும் அதனுடைய அடையாளங்களில் பலவற்றை இழந்து விடுவதைக் காண்கிறோம். அதனுடைய எழுத்துக்களில் மாற்றம் ஏற்படும்; அமைப்புகளில் மாற்றம் ஏற்படும்; பேச்சு வழக்குகளில் மாற்றம் ஏற்படும். இப்படி பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவது எல்லா மொழிகளிலும் காணப்படும்.

அத்தகைய மாற்றங்கள் அரபுமொழியிலும் ஏற்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கும், இப்போது உலகம் முழுவதும் உள்ள குர்ஆனுடைய எழுத்துக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன.

அன்று எழுதப்பட்ட மூலப் பிரதியை இன்று அரபுமொழி தெரிந்தவரிடத்திலே கொடுத்தால் அவரால் அதை வாசிக்கவே முடியாது என்ற அளவுக்கு மாறுதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மாறுதலால் குர்ஆனின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விட்டதாகக் கருதக்கூடாது. ஏனென்றால் குர்ஆன் எழுத்து வடிவமாக வழங்கப்படவில்லை. ஒலி வடிவமாகக் தான் வழங்கப்பட்டது.

இறுதி வரை நிலைத்திருக்கும் ஒரு ஆவணமாக ஆக்குவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுத்து வடிவமாக்கினார்கள்.

இறைவனிடமிருந்து குர்ஆன் நபிகள் நாயகம் அவர்களுக்கு வந்தபோது ஒலி வடிவமாகத்தான் வந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த ஒலி வடிவம் இன்று வரை எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்து வருகிறது.

இன்றைக்கும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற மூலப் பிரதியை பழங்கால எழுத்தை வாசிக்கத் தெரிந்தவரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னால் அவர் வாசிப்பதும், இப்போது அச்சிடப்படும் குர்ஆனை வாசிப்பதும் ஒரே ஓசை கொண்டதாகவும், ஒரே உச்சரிப்பைக் கொண்டதாகவும் இருக்கும். இரண்டுக்குமிடையே எந்த வித்தியாசமும் இருக்காது.

தமிழக மக்கள் புரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணத்தைக் குறிப்பிடலாம். தஞ்சையிலே சரஸ்வதி மஹாலில் பழங்காலச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்தத் தமிழ்ச் சுவடிகளை நம்மால் வாசிக்க முடியாது. ஆனால் அந்தச் சுவடியில் உள்ள ஒரு பகுதியை பழங்கால எழுத்தை வாசிக்கத் தெரிந்தவர் வாசித்தால் தற்போது நம் கைவசத்தில் இருக்கும் பிரதியைப் போன்று தான் வாசிப்பார்.

அதே போல் தான் அரபுமொழியின் எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் ஏற்பட்டாலும், குர்ஆனுடைய உச்சரிப்பிலோ, ஓசையிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு எந்தக் குந்தகமும் ஏற்படவில்லை.

இதனால் தான் திருக்குர்ஆன் நல்லோரின் உள்ளங்களில் பாதுகாக்கப்படுகிறது என்று இறைவன் கூறுகிறான் (29:49).

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு அரபு மொழியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதைப் பார்ப்போம்.

புள்ளிகள்

அரபு மொழியில் ஒரு புள்ளி உள்ள எழுத்துக்கள், இரண்டு புள்ளி உள்ள எழுத்துக்கள், மூன்று புள்ளி உள்ள எழுத்துக்கள், மேலே புள்ளி உள்ள எழுத்துக்கள், கீழே புள்ளி உள்ள எழுத்துக்கள் என உள்ளன.

அரபுமொழியில் ஐந்தாறு எழுத்துக்களுக்கு ஒரே வடிவம் உள்ளதால் இந்தப் புள்ளிகளை வைத்துத்தான் இன்ன இன்ன எழுத்து என அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் எழுத்துக்களுக்குப் புள்ளிகள் இருக்கவில்லை. இதனால் ஒரே வடிவத்தில் பல எழுத்துக்கள் இருந்தன. ஆயினும் அந்த மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள், இந்த இடத்தில் இன்ன எழுத்துத்தான் இருக்க முடியும் என்று வாக்கிய அமைப்பைக் கவனித்துச் சரியாக வாசித்து விடுவார்கள்.

இஸ்லாம் உலகம் முழுவதும் பரவிய பிறகு, அரபுமொழியின் பொருள் தெரியாமலே இறைவேதம் என்பதற்காக அதை வாசிக்கின்ற மக்கள் பெருகியபோது, புள்ளிகள் இட்டு எழுத்துக்களை இனம் காட்டினார்கள்.

புள்ளிகள் அமைக்கப்பட்ட எழுத்துக்கள் மூலப் பிரதியில் கிடையாது. புள்ளி வைப்பது மக்களுக்கு உதவிகரமாக இருப்பதால் முஸ்லிம் உலகம் இதை ஒட்டு மொத்தமாக அங்கீகரித்துக் கொண்டது.

குர்ஆனுக்காகச் செய்யப்பட்ட இந்த மாறுதலை அரபுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் பழகிக் கொண்டார்கள். அவர்களும் பழங்கால எழுத்து முறையை மறந்து விட்டார்கள். இது அரபுமொழியில் செய்யப்பட்ட ஒரு முக்கியமான மாறுதல்.

உயிர் மெய்க் குறியீடுகள்

தமிழ் மொழியில் ‘க’ என்று எழுதினால் பார்த்தவுடனே அதை க என்று வாசிக்க முடியும். ‘கீ’ என்பது வேறு வடிவம் பெறுவதால் அதை ‘கீ’ என வாசிக்க முடியும். ‘கு’ என்பது இன்னொரு வடிவம் பெறுவதால் அதை ‘கு’ என்று வாசிக்க முடியும்.

ஆனால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் அரபு மொழியில் உயிர், மெய்க் குறியீடுகள் இருக்கவில்லை. க, கி, கு, க் ஆகிய நான்கிற்கும் ஒரே வடிவம் தான் இருந்தது. எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இடத்தை வைத்து அதை எவ்வாறு வாசிப்பது என்பதை அன்றைய அரபுகள் கண்டு கொள்வார்கள்.

ஆயினும் இஸ்லாம் உலகின் பல பாகங்களுக்கும் பரவி, பொருள் தெரியாதவர்களும் குர்ஆனை வாசிக்கும் நிலை ஏற்பட்டபோது அவர்களுக்கு உதவிகரமாக இருக்க பிற்காலத்தில் உயிர், மெய்க் குறியீடுகள் (உருது மொழியில் ஸேர், ஸபர், பேஷ், ஸுக்கூன்) இடப்பட்டன.

இந்த வேறுபாடுகள் மூலப் பிரதியில் இருக்காது. அதில் க, கி, கு, க் என்று அனைத்துமே ஒரே மாதிரியாகத்தான் எழுதப்பட்டிருக்கும்.

இந்த மாறுதலையும் முஸ்லிம் உலகம் ஏற்றுக் கொண்டது. அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் குர்ஆனைத் தவிர மற்ற நூல்களில் உயிர், மெய்க் குறியீடுகளைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. குறியீடுகள் இல்லாமலே அவர்கள் அதனைச் சரியாக வாசித்து விடுவார்கள்.

அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சியில் ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்ற அதிகாரியின் மேற்பார்வையில் பல அறிஞர்கள் கூடி இந்த மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். இதை உலக முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

குர்ஆனுடைய மூலப் பிரதியில் உள்ள எழுத்துக்கும், இப்போது உள்ள பிரதிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பார்த்து குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கருதிடக் கூடாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed