முன் சுன்னத்களை பாங்குக்கு முன்னாள் தொழலாமா

பாங்கு சொன்ன பிறகே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் சுன்னத் தொழுதுள்ளனர் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

*முஅத்தின் சுப்ஹுடைய பாங்கை முடித்ததும் இகாமத் சொல்வதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்*.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 626

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

(ஃபஜ்ருடைய) *பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களையும் அவர்கள் ஒரு போதும் விட்டதில்லை.*

நூல் : புகாரி 1159

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பாங்கிற்குப் பிறகே மஃக்ரிப் தொழுகையின் முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

*தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லத் தொடங்கி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வருவதற்கு முன்னர் நபித்தோழர்களில் (முக்கிய) சிலர் பள்ளிவாசலின் தூண்களை நோக்கி (அதை தடுப்பாக ஆக்கி சுன்னத் தொழ) போட்டியிட்டுக்கொண்டு செல்வார்கள். அவர்கள் இவ்வாறே மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் (இடைவெளி) ஏதும் இல்லாத நிலையில் (இவ்வாறு தொழுதனர்).*

நூல் : புகாரி 625

*ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு* என்று மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாம் முறை) *விரும்பியவர்கள் தொழலாம்* எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல் : புகாரீ 624

இந்த ஆதாரங்களைப் பார்க்கும் போது பாங்குக்குப் பிறகே சுன்னத்தான தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளனர் என்று தெரிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒவ்வொரு தொழுகைக்கும் நேரம் எப்போது ஆரம்பிக்கிறதோ அப்போதே பாங்கு சொல்லப்பட்டு விடும். ஜமாஅத் தொழுகை நேரம் தாமதப்பட்டாலும் பாங்கின் நேரம் தாமதப்படுத்தப்பட்டதில்லை.

சூரியன் உச்சியில் இருந்து சாய்ந்த உடன் பிலால் (ரலி) அவர்கள் ளுஹருக்குப் பாங்கு சொல்வார். ஆனால் *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வரும் வரை இகாமத் சொல்ல மாட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டவுடன் இகாமத் சொல்வார்.*

நூல் : முஸ்லிம் 1400

*பிலால் இரவில் பாங்கு சொல்வார். எனவே நீங்கள் இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள். ஏனெனில் அவர் ஃபஜ்ரு நேரம் வரும் முன் பாங்கு சொல்ல மாட்டார்* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரீ 1919

ஃப்ஜ்ரு நேரம் வந்த உடன் ஃப்ஜ்ரு தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்கிறோம்.

ஆனால் இன்று பல ஊர்களில் தொழுகை நேரம் வந்து நீண்ட நேரம் கழித்து பாங்கு சொல்லப்படுகிறது. உதாரணமாக ஹனஃபி மத்ஹப்காரர்கள் வாழும் ஊர்களில் அஸர் நேரம் வந்து ஒரு மணி நேரம் கழித்து பாங்கு சொல்லப்படுகிறது. தொழுகையின் ஆரம்ப நேரத்தில் அஸர் பாங்கு சொல்லப்படுவதில்லை.

பல ஊர்களில் லுஹர் நேரம் பகல் 12 மணிக்கு வந்தாலும் பகல் ஒரு மணிக்கு பாங்கு சொல்வதைப் பார்க்கிறோம்.

இது போல் *தாமதமாகப் பாங்கு சொல்லப்படும் போது சுன்னத் மட்டுமின்றி கடமையான தொழுகைகளையும் நாம் ஆரம்ப நேரத்தில் பாங்கு சொல்லித் தொழலாம்.*

ஊரில் பாங்கு சொல்வதைத் தாமதமாக்கினால் நாம் தொழுகையின் ஆரம்ப நேரத்தில் பாங்கு சொல்லி ஆரம்ப நேரத்தில் ஃபர்ளையும், சுன்னத்தையும் தொழுது கொள்ளலாம்.

————————

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed