*புத்தாண்டு கொண்டாட நினைக்கும் இஸ்லாமிய சமுதாயமே*

*நாம் புத்தாண்டை கொண்டாடலாமா❓*

*புத்தாண்டிற்கு வாழ்த்து சொல்லலாமா❓*

ஆங்கிலப் புத்தாண்டு என்பது இயேசுவின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் புத்தாண்டு கிறித்தவர்களின் மதப் பண்டிகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, *அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை* என்பது தனி விஷயம்.

*புத்தாண்டு கொண்டாட்டம் கிறித்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால்* அதை நாம் கொண்டாடக் கூடாது.

*ஒரு சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் அவர்களைச் சேர்ந்தவராவார்* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : *அபூதாவூத் 3513*

மேலும் புத்தாண்டுக் கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?

நமது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டது என்ற கவலைப்படும் தகவல் தான் அதனுள் அடங்கியுள்ளது.

*ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூடநம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.*

இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களைத் தடைசெய்கின்றது.

மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாகக் கருதி வந்தனர். இதைக் கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளாக ஆக்கிக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களுக்கும் என்ன சிறப்பு என்று நபிகள் நாயகம் அவர்கள் (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும், நோன்புப் பெருநாளுமாகும்* என்று கூறினார்கள்.

நூல் : *அபூதாவூத் 959*

புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு *அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும், மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. ஆண்களும், பெண்களும் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் நாசமாக்கப்படுகின்றன. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன.* எனவே புத்தாண்டு கொண்டாட்டத்தை நாம் புறக்கணிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவது தான் மார்க்கத்தில் தடை. நாம் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு முஹர்ரம் மாதம் முதல் பிறை அன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது.

மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், *இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று சொல்வதும், அதைக் கொண்டாடுவதும் தவறாகும்.*

_______________

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed