பரக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள்

நபியவர்கள் இந்த பரக்கத்தை அடைவதற்கு பிரார்த்தனையும் செய்துள்ளார்கள்.

இதனைப் பின்வரும் ஹதீஸ்களில் காணலாம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையார் உஹுதுப் போரின் போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டு விட்டார்கள்.

கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.)

நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர்.

ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, நாம் உன்னிடம் காலையில் வருவோம் என்று கூறினார்கள்.

பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ செய்தார்கள்.

பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாகி விட்டன.

நூல்: புகாரி 2395

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் (ஆடையின்) மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இது என்ன? என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து, ஒரு பெண்ணை நான் மணமுடித்துக்கொண்டேன் என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், பாரக்கல்லாஹ்லிஅல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவானாக! என்று பிரார்த்தித்து விட்டு,

ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா மணவிருந்து அளியுங்கள் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-5155

ஒரு மனிதனுக்கு அதிகம் செல்வம் இருப்பதை விட, கொடுக்கப்பட்ட செல்வத்திலேயே அவனது தேவை அனைத்தும் நிறைவேறுவதென்பது அதை விடச் சிறந்தது.

இந்த ஒரு பிரர்த்தனையைத் தான் எல்லா திருமணங்களிலும் சொல்லும்படி கட்டளையிட்டார்கள். இதைத் தான் நாமும் இன்று மணமக்களை வாழ்த்துவதற்காகக் கூறுகிறோம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் (பரகத்) வளம் சேர்ப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

நூல்: புகாரி 6344

குறைந்த செல்வமாக இருந்தாலும் அதில் அல்லாஹ் பரக்கத் செய்து விட்டால் அதுவே போதுமானதாகும். ஒருவன் இதைச் சிந்தித்தால் அவன் பேராசை கொள்ள மாட்டான்.

எனவே பொருளாதாரத்தில் பேராசை கொள்ளாமலும் மற்றவர்களை மோசடி செய்யாமலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் பரக்கத்தைத் தந்திருக்கிறான் என்பதை விளக்குகின்றன.
————————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed