*திருக்குர்ஆன் கேள்வி* – பதில் (Part 7)

கேள்வி: *கலந்தாலோசனை செய்வது குறித்து குர்ஆன் கூறுவது என்ன*?     

பதில்: *இறைநம்பிக்கை கொண்ட முஃமின்கள் தங்கள் காரியங்களை தங்களிடையே கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும்*. (குர்ஆன் 42:36-38 & 3:159)

கேள்வி: *சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உவமைகளாக இறைவன் தன் திருமறையில் எதைக் கூறுகின்றான்?*       

பதில்: *அவன் வானிலிருந்து மழை பொழியச் செய்கிறான். நீரோடைகள் தத்தமது அளவுக்குத் தக்கபடி ஓடுகின்றன*. பொங்கும் நுரையைச் சுமந்தவாறு வெள்ளம் ஓடுகிறது.

*நகையோ, நுகர்வுப் பொருளோ செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்கும்போதும் அதுபோன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் எடுத்துக்காட்டைக் கூறுகிறான்*.

நுரை வீணாகப் போய் விடுகிறது; ஆனால் மக்களுக்குப் பயனளிப்பதோ பூமியில் தங்கி விடுகிறது. இவ்வாறே அல்லாஹ் எடுத்துக்காட்டுகளை எடுத்துரைக்கிறான். (குர்ஆன் 13:17)

கேள்வி: தீயோர்களின் பதிவேடு குறித்து குர்ஆன் கூறுவது என்ன?     

பதில்:  உண்மையில், தீயவர்களின் பதிவேடு *ஸிஜ்ஜீனில்* உள்ளது. ‘*ஸிஜ்ஜீன்*’ என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? (அது) எழுதப்பட்ட பதிவேடு!

பொய்யெனக் கூறுவோருக்கு அந்நாளில் கேடுதான்! தீர்ப்பு நாளை அவர்கள் பொய்யெனக் கூறினர். *பாவம் செய்து, வரம்பு மீறும் ஒவ்வொருவனையும் தவிர வேறெவரும் அதைப் பொய்யெனக் கூறமாட்டார்கள்*.

அவனுக்கு நமது வசனங்கள் எடுத்துரைக்கப்படும்போது, “*முன்னோரின் கட்டுக் கதைகள்*” என அவன் கூறினான்.

அவ்வாறல்ல! அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களின் உள்ளங்களில் கறையாகப் படிந்து விட்டன.

*உண்மையில், அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் திரையிடப்படுவார்கள்*. பின்னர் அவர்கள் நரகத்தில் நுழைவார்கள். பின்னர் “*நீங்கள் எதைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தீர்களோ அது இதுதான்*” என்று கூறப்படும். (குர்ஆன் 83:7-17)

கேள்வி: *நல்லோர்களின் பதிவேடு* குறித்து குர்ஆன் கூறுவது என்ன?   

பதில்:  உண்மையில், நல்லவர்களின் பதிவேடு ‘*இல்லிய்யூனில்*’ உள்ளது. ‘*இல்லிய்யூன்’* என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? (அது) எழுதப்பட்ட பதிவேடு! நெருக்கமான (வான)வர்கள் அதைக் காண்கின்றனர்.

*நல்லவர்கள் இன்பத்தில் இருப்பார்கள்.கட்டில்களின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய முகங்களில் இன்பத்தின் பொலிவை அறிந்து கொள்வீர். முத்திரையிடப்பட்ட தூய மதுரசம் அவர்களுக்குப் புகட்டப்படும்*.

*அதன் முத்திரை கஸ்தூரியாகும்*. ஆசைப்படுவோர் இதற்கு ஆசைப்படட்டும். அதன் கலவை ‘தஸ்னீம்’ ஆகும். (அது) ஓர் நீரூற்று. அதிலிருந்து (இறைவனுக்கு) நெருக்கமானோர் அருந்துவார்கள். (குர்ஆன் 83: 18-28)

கேள்வி: .*கல்வி ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் இதயத்தில் குர்ஆன் பாதுகாக்கப்படுகிறது என இறைவன் கூறும் வசனம் எது.*?     

பதில்: *இவை அறிவு வழங்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இருக்கும் தெளிவான வசனங்களாகும்*. (குர்ஆன் 29:49)

கேள்வி: .*நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவதன் அவசியம்* குறித்து குர்ஆன் கூறும் வசனங்களில் மூன்றைக் கூறுக:     

பதில்:  *இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்களின் செயல்களை வீணாக்கி விடாதீர்கள்.

தூதர் உங்களுக்குக் கொடுத்ததை எடுத்துக் கொள்ளுங்கள்*.

.*எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்*.

*நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன்.* என்று (நபியே!) கூறுவீராக! (குர்ஆன் 47:33 & 59:7& 3:31)

கேள்வி: *இஸ்லாம் அல்லாத மற்ற மார்க்கங்களைப் பின்பற்றுவது குறித்து குர்ஆன் கூறுவது என்ன*?     

பதில்: *யாரேனும் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை விரும்பினால் அது அவரிடமிருந்து அறவே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது*. மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் (ஒருவராக) இருப்பார்.( அல்-குர்ஆன் 3:85)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed