தொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா?

தொழலாம்.

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.

1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.

2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை.

3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1373

மேற்கண்ட மூன்று நேரங்கள் பொதுவாகத் தொழுவதற்கு தடை செய்யப்பட்ட நேரங்கள். ஆனால் கிரகணத் தொழுகையைப் பொறுத்தவரை அதை எப்போது தொழ வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள். கிரகணம் ஏற்பட்டது முதல் அது நீங்குகின்ற வரை தொழ வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புதல்வர் இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் “இப்ராஹீமின் இறப்புக்காகத் தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக்கொண்டனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் பிரகாசம் வரும்வரை அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்!” என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 1060

எனவே கிரகணத் தொழுகை சூழ்நிலையைப் பொறுத்து தொழப்படுகின்ற தொழுகையாகும். எந்த நேரத்தில் இது ஏற்பட்டாலும் தொழலாம். மேலே கூறப்பட்ட மூன்று நேரங்களில் தொழக்கூடாது என்ற சட்டம் கிரகணத் தொழுகைக்குப் பொருந்தாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed