ஒருவர் செய்த பாவத்திற்காக இன்னொருவர் தண்டிக்கப்பட மாட்டார் என்று திருக்குர் ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது இந்த விவகாரத்தில் இஸ்லாத்தில் எந்த சமரசமும் இல்லை.

قُلْ اَغَيْرَ اللّٰهِ اَبْغِىْ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَىْءٍ‌ ؕ وَلَا تَكْسِبُ كُلُّ نَـفْسٍ اِلَّا عَلَيْهَا‌ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌ ۚ ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْـتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ

6:164. “அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் – பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.

تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ‌ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَـكُمْ مَّا كَسَبْتُمْ‌ۚ وَلَا تُسْـَٔـلُوْنَ عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ

2:134. அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது; அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.

மேலும் பார்க்க அல் குர் ஆன் ( 17 : 15 , 35 : 18 , 39 :7 )

யாரோ செய்த பாவத்திற்காக சமபந்தமில்லாத இன்னொருவரை அல்லாஹ் தண்டிக்க மாட்டான் என்று திருக்குர் ஆன் பகிரங்க அறிவிப்பு செய்து விட்டது.

இஸ்லாத்தின் போதனை இவ்வாறிருக்கும் போது பின்வரும் செய்தி முஸ்லிம்கள் செய்த பாவத்தை யூத , கிறித்தவ மக்களின் மீது சுமத்தி அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாகத் தெரிவிக்கின்றது

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ أَبِي، بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ دَفَعَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى كُلِّ مُسْلِمٍ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا فَيَقُولُ هَذَا فَكَاكُكَ مِنَ النَّارِ “

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான்.

இவ்வாறே நான் கருதுகிறேன்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூரவ்ஹ் ஹரமீ பின் உமாரா (ரஹ்) அவர்கள், “இவ்வாறே நான் கருதுகிறேன் எனும் ஐயப்பாட்டைத் தெரிவித்த அறிவிப்பாளர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை” என்று கூறுகிறார்கள்.

அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற (அவர்களுடைய புதல்வரான) அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், “இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தா உம்முடைய தந்தை அறிவித்துள்ளார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “ஆம்” என்றேன்.

நூல் : முஸ்லிம் 5344

முஸ்லிம்களின் பாவம் யூத , கிறித்தவர்கள் மீது சுமத்தப்படும் என்றால் ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்ற இஸ்லாம் கூறும் அடிப்படை தத்துவத்திற்கு எதிராகவும் குர் ஆனுக்கு முரணாகவும் தான் இந்த செய்தி அமைத்துள்ளது.

இதை குர் ஆனுக்கு முரணில்லாமல் இணக்கமான விளக்கம் கொடுத்து புரிந்து கொள்வது சாத்தியமாகுமா ?

இந்தச் செய்தியின் அனைத்து அறிவிப்புகளையும் ஒன்றிணைத்து ஆய்வு செய்யும் போது இதற்கான விடையை காணலாம்.

இந்தச் செய்தியில் குர் ஆனுடன் கருத்து மோதலை ஏற்படுத்தும் வாசகம் பின் வருவனவாகும்.
” மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான் “
முஸ்லிம் 5344

முஸ்லிம்களின் பாவத்தை அல்லாஹ் மன்னிப்பான் என்பதில் எந்தப் பிரச்சனையுமில்லை இது இறைவனின் கருணையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
ஆனால் அந்தப் பாவத்தை யூத கிறித்தவர்கள் மீது சுமத்துவான் என்பது நிச்சயம் குர் ஆனுடன் கடுமையாக மோதல் போக்கைக் கைகொள்ளும் வாசகமாகும் என்பதில் சந்தேகமில்லை.

இமாம் பைஹகீ அவர்கள் இந்தச் செய்தியை பதிவு செய்து விட்டு பின்வருமாறு கருத்து தெரிவிக்கின்றார்
இமாம் முஸ்லிம் தனது நூலில் ஷத்தாத் அபூதல் ஹாவை துணைச் சான்றிற்கு ஆதாரமாகக் கொண்டிருந்தாலும் ஹதீஸ் கலை அறிஞர்கள் இவரை விமர்ச்சித்துள்ளனர் ஏனையோர் மாற்றமாக அறிவித்திருக்கும் நிலையில் இவரது அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது .

ஹதீஸ்யின் வாசகத்தை இவருக்கு மாற்றமாக அறிவித்தவர்கள் அதிகமானவாவர்களாகவும் ( இந்த வாசகத்தை சொன்னதில் ) இவர் தனி ஒருவராகவும் இருக்கும் போது எப்படி இவரது அறிவிப்பை ஏற்றுக் கொள்வது ?

இத்தனைக்கும் இவருக்கு மாற்றமாக அறிப்பவர்கள் இவரை விட நன்கு மனனமிட்டவர்கள் ஆவார்கள்.

“ ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார் “ ( அல் குர் ஆன் 53 : 38 )

என்ற சரியான அடிப்படைக்கு மாற்றமாக அறிவித்திருக்கும் இவரது அறிவிப்பை விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை .

ஷூஅபுல் ஈமான் ( பாகம் 1 : பக்கம் 583 )

இவ்வாறு பைஹகீ விமர்சித்துள்ளார். ஹதீஸ் அறிஞர்களிடம் இவர் வலுவானவர் அல்ல என்று இமாம் ஹாகிம் விமர்சித்துள்ளார்.

அப்துஸ் ஸமத் பின் அப்துல் வாரிஸ் இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளதாக இமாம் புஹாரி கூறுகிறார்.

பார்க்க ( தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 4 பக்கம் 278 )
எனவே பலவீனமான செய்தி என்பது உறுதியாகிறது

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed