இறையருளைப் பெற்றுத்தரும் அரஃபா தினமும், அரஃபா நோன்பும்

துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் உள்ள மிக முக்கியமான நாள் அரஃபா நாளாகும். அதாவது துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் தான் ஹாஜிகள் அரஃபா என்ற பெருவெளியில் இலட்சோப இலட்ச மக்கள் திரண்டு நின்று அல்லாஹ்வின் அருளுக்காகவும், மன்னிப்பிற்காகவும், அன்பைப் பெறவும் ஆதரவு வைத்தவர்களாய் அணிதிரண்டு நிற்பார்கள்.

அன்றைய அரஃபா நாள் என்பது மக்காவில் கூடி இருக்கின்ற ஹாஜிகளுக்கு மாத்திரம் உரிய நாளாகக் கருதி விடக் கூடாது. மாறாக, பிறை ஒன்பது அன்று உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைத்து முஃமினான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சொந்தமான புனிதம் நிறைந்த அரஃபா நாள்.

உலகத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 23 ஆண்டு காலமாக தூதுத்துவப் பாடம் நடத்தினார்கள் அல்லவா! அந்தத் தூதுத்துவத்தின் இறுதி உபதேசமாக 23 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றைச் சாறு பிழிந்து மக்களின் உள்ளங்களில் ஆழப்பதிய வைத்து, பிரம்மாண்டமான ஒரு பேருரை நிகழ்த்தியதும் இந்த அரஃபா நாளில் தான்.

அரபா தினம் என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க தினம். வரலாறுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய புனித நாள் அரஃபா. அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் எனும் வாழ்வியல் நெறியை முழுமைப்படுத்தினான்.

தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் ஓதிக்கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப் பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம்’’ என்றார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் “அது எந்த வசனம்?’’ எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், “இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்திவிட்டேன். உங்கள் மீது எனது அருள்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாமையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்’’ (என்பதே அந்த 5:3 வசனமாகும்)’’ என்றார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் “இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக் கிழமை தினத்தில் அரஃபா பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும் போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது; அந்த நாளே பண்டிகை நாள்தான்)’’ என்றார்கள்.

ஆதாரம்: புகாரி 45

ஹஜ் என்பதே அரஃபாவில் தங்குவது தான். பத்தாம் இரவில் ஃபஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: நஸயீ 2966

புனிதம் நிறைந்த ஹஜ் பயணம் இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அரஃபாவுக்குச் சென்றால் தான் முழுமையாக அடைந்து கொள்ள முடியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

2 thoughts on “இறையருளைப் பெற்றுத்தரும் அரஃபா தினமும், அரஃபா நோன்பும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed