*அக்பா உடன்படிக்கை*

இஸ்லாத்தை எட்டு திக்கும் பரவ செய்யும் நோக்கில் பல வழிகளில் தாவா செய்து வந்தார்கள் நபி (ஸல்) அவர்கள்.

அன்றைய காலகட்டத்தில், மக்கா நகருடன் வியாபார தொடர்பில் இருந்த மதினா நகரில் நபிகள் நாயகம் பற்றிய செய்தி சென்றடைகிறது.

மக்காவில் வாழ்வதற்கே வழியில்லாத நிலை ஏற்பட்டாலும், மதினாவில் இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு அங்குள்ள மக்கள் மத்தியில் வேகமாக பரவத் துவங்கியது.

இவ்வாறு மதினாவில் இஸ்லாம் பரவிய அந்த காலகட்டத்தில், அங்கு அவ்ஸ் , கஸ்ரஜ் ஆகிய இரு கோத்திரத்தார் வாழ்ந்து வந்தனர். இரு கோத்திரத்தாரும் பல பிரிவுகளாக பிரிந்து மக்காவுக்கு பயணமாகி நபியை சந்தித்து இஸ்லாத்தை ஏற்கிறார்கள்.

குறிப்பாக, மினா நகரத்திற்கு அருகாமையில் இருக்கும் அல் அகபா எனும் பகுதியில் வைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதினாவாசிகளில் பெரும் பகுதினர் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதோடு, தாங்கள் ஏற்ற இந்த கொள்கையை மதினாவுக்கு சென்று பரப்பவும் செய்வோம் என்று நபியிடம் உறுதிமொழி அளிக்கின்றார்கள்.

அதிகமான வரலாற்று செய்திகளை கொண்ட இந்த சம்பவங்கள் புஹாரி 3892 வில் பதிவாகியுள்ளது.

நபியுடன் மதினாவாசிகள் செய்து கொண்ட இந்த ஒப்பந்த்தம் தான் இஸ்லாம் மக்காவை தாண்டி பரவுவதற்கு வித்திட்டது.

இந்த ஒப்பந்தம் தான் நபியும் அவர்களது தோழர்களும் மக்காவில் அடைந்து வந்த துன்பங்களுக்கு விடிவுகாலமாகவும் அமைந்தது.

இஸ்லாமிய வரலாற்றில் அல் அகபா உடன்படிக்கை தனி முத்திரை பதித்தது.

அகபா உடன்படிக்கை வெற்றிகரமாக நிறைவேறியதற்கு பிறகு தான், வாழ்வதற்கு தகுதியற்றதாய் திகழும் தங்களது சொந்த ஊரை விட்டு இடம் பெயரும் எண்ணம் நபி (ஸல்) அவர்கள் மனதில் எழுகிறது.

இருப்பினும், அல்லாஹ்விடமிருந்து அது குறித்து எந்த கட்டளையும் வராத காரணத்தால் மதினா தான் ஹிஜ்ரத்திற்கான இலக்கு என்பதை அவர்கள் முடிவு செய்யவில்லை.

மாறாக, மக்காவிலிருந்து வெளியேற விருப்பம் தெரிவிக்கும் தோழர்கள் அனைவருக்கும் வெளியேறுவதற்கான ஒப்புதலை மட்டும் வழங்கினார்கள்.

அந்த வகையில், அன்றைக்கு எந்தெந்த நாடுகளெல்லாம் வசதியானதாகவும் பாதுகாப்பானதாகவும் சஹாபாக்கள் கருதினார்களோ அங்கெல்லாம் இடம் பெயர துவங்கினார்கள்.

முதல் கட்டமாக, உஸ்மான் (ரலி) அவர்கள், தமது மனைவியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது புதல்வியுமான ருகைய்யா அவர்களை அழைத்துக் கொண்டு அபிசீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள்.

இவ்வாறு, சஹாபாக்கள் அனைவரும் ஹிஜ்ரத்திற்கான ஏற்பாடுகளுடன் இருந்த காலகட்டத்தில் தான் அல்லாஹ்விடமிருந்து ஹிஜ்ரத் குறித்த கட்டளை நபிகளாரை வந்தடைந்தது.

இரண்டு கருங்கல் மலைகளுக்கு இடையே பேரீச்சம்மரங்கள் நிறைந்த ஊரில் ஹிஜ்ரத் செய்யுமாறு அல்லாஹ்விடமிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளை வந்த செய்தி புஹாரி 3622 வில் பதிவாகியுள்ளது.

இது மதினா நகரை தான் குறிக்கும் என்பதை உணர்ந்து கொண்ட நபிகள் பெருமானார், அனைத்து தோழர்களையும் மதினாவை நோக்கி ஹிஜ்ரத் செய்ய ஆயுத்தப்படுத்தினார்கள்.

மூன்று குழுக்களாக‌ ஹிஜ்ரத் பயணிகள் பிரிந்தனர்.

முதல் குழுவில் முஸ்ஹப் பின் உமைர் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) போன்ற முக்கிய சஹாபாக்கள் புறப்பட்டனர்.

அடுத்த குழுவில் பிலால் (ரலி), அம்மார் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) போன்றவர்கள் செல்ல, இன்னொரு குழு உமர் (ரலி) அவர்கள் தலைமையில் புறப்பட்டது.

இதற்கிடையே, அபீசீனியா சென்ற உஸ்மான் (ரலி) அவர்களும், மதினா தான் ஹிஜ்ரத்திற்கான இலக்கு என்பதை அறிந்து கொண்டு அங்கிருந்து நேரடியாக மதினா சென்றார்கள்.

மேலே உள்ள செய்திகள் அனைத்தும் புஹாரி 3927 இல் விளக்கமாக பதிவாகியுள்ளது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed